ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 9. திருவருள் வைப்பு

பதிகங்கள்

Photo

தேர்ந்தறி யாமையின் சென்றன காலங்கள்
பேர்ந்தறி யான்எங்கள் பிஞ்ஞகன் எம்மிறை
ஆர்ந்தறி வார்அறி வேதுணை யாம்எனச்
சார்ந்தறி வான்பெருந் தன்மைவல் லானே.

English Meaning:
Lord Knows His Devotees in Time

In ignorance my time rolled on;
Yet my Lord will in time know me;
By their light of Knowledge and love intense
He will know them,
He the Bounteous One.
Tamil Meaning:
எங்கள் இறைவனாகிய சிவன் எம்மை விட்டு ஒரு போதும் நீங்கியதில்லை. அதனை அனுபவமாக உணர்ந்த அனுபூதி மான்களது அறிவுரையை `இதுவே மநக்குத்துணையாவது` என்று பற்றி உணரவல்லவன் எவனோ அவனே பொரும்பொருள் தன்மையைத் தான் பெற வல்லவனாவன். அதனை முன்பே உணர்ந்து ஒழுகாமையால் பல காலங்கள் வீணாகவே கழிந்தன.
Special Remark:
`என்றாலும் இப்பொழுதாயினும் அவ்வாறு உணர்ந்து ஒழுகத் திருவருள் கிடைத்தது தவப் பயன்` என்பது குறிப்பெச்சம்.
பிஞ்ஞகம் - தலைக்கோலம். பிறை, பாம்பு, கங்கை, கொன்றை மாலை முதலிய பலவகைப்பட்ட தலைக்கோலமும், சடை முடியும் சிவபிரானுக் கல்லது பிறர்க்கு இன்மையால் சிவபிரான் `பிஞ்ஞகன்` எனப்படுகின்றான். அவனே இறைவனாதலைக் குறித்தற்கு, ``பிஞ்ஞகன் எம்மிறை`` என்றார். முதல் அடியை ஈற்றில் வைத்துரைக்க.
இதனால், `சிவனை அவனது அருளைத் துணையாகப் பற்றியே அறிய இயலும்` என்பதும், `அதனை அவ்வாறு அவனை அடைந்தோரது அருளுரையே உணர்த்தும்` என்பதும், `அவ்வருளுரையைத் தெளிதற்கும் சிவனது அருள் வேண்டும்` என்பதும் கூறப்பட்டன. அடைந்தோரது அருளுரைகள் அங்ஙனம் உண்ர்த்துதலை,
``அவன் அருளே கண்ணாகக் காணி னல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வணத்தன்
இவன் இறைவன் என்றெழுத்திக் காட்டொணாதே`` *
என்பது முதலியவற்றான் உணர்க.