ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்

பதிகங்கள்

Photo

மூலன் உரைசெய்த மூவா யிரந்தமிழ்
மூலன்உரைசெய்த முந்நூறு மந்திரம்
மூலன் உரைசெய் முப்ப துபதேசம்
மூலன் உரைசெய்த மூன்றும்ஒன் றாமே.

English Meaning:
Tirumular`s Songs, Mantras and Instructions Have But One Import

The Three times Thousand that Mula composed,
The Three Times Hundred Mantras that Mula chanted,
The Three Times Ten Instructions that Mula gave,
These Three that Mula said
Are all, all, of one import.
Tamil Meaning:
இது நூல் சிதையாமைப் பொருட்டு இதன் அளவை நூற்குள்ளே வரையறை செய்தது.
Special Remark:
``தமிழ்`` என்பது தமிழால் ஆகிய பாடலைக் குறித்தது. இந்நூலின் பாடல் தொகை மூவாயிரம்` என்பதாம்.
`இந்நூற் பாடல்கள் அனைத்துமே `மந்திரம்` எனப் பெயரிடப்பட்ட போதிலும், சிறப்பாக மந்திரமாகவே அமைந்த பாடல்கள் முந்நூறு` என்றபடி. அவை நான்காம் தந்திரத்தில் எண்ணிக் கொள்ளற்பாலன. `எந்திரம்` எனப்படும் சக்கரங்களும் `மந்திரம்` என்றதனானே பெறப்பட்டன. அவை மிகச்சில ஆதலின், தொகை சொல்லப்படவில்லை. இங்ஙனமாயினும், `முந்நூறு மந்திரம்` என்றே ஒரு தனி நூலும் வெளி வந்துள்ளது.1
`உபதேசம்` என்பது ஓர் அதிகாரம். முப்பது பாடல்களுடன் முதல் தந்திரத்தில் இருத்தல் நன்கறியப்பட்டது. முந்நூறு மந்திரத்தை வேறு கண்டவர்க்கு, முப்பது உபதேசம் வேறு கிடைக்கவில்லை போலும்!.
ஈற்றடியில் ``மூன்றும் ஒன்றாமே`` என முடிபு கூறியது, `மந்திரம் உபதேசம்` - எனக் கூறியவற்றை மூவாயிரம் வேறு என மலையற்க - என மலைவு தீர்த்தது. ``செய்த`` `செய்தன` என அன் பெறா அகர ஈற்றுப் பன்மை வினைப் பெயர். இவை செயப்படு வினையாய் நின்றன. இதிலும் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இங்ஙனம் நாயனார் பாதுகாப்புச் செய்தும், பிரதிகள் நன்கு போற்றாமையால் பாடங்கள் மிகத் திரிக்கப்பட்டும், பாடல்கள் இடம் மாற்றப்பட்டும் சொற்கள் இருமுறை, மூன்றுமுறை சேர்க்கப்பட்டும், சில பாடல்களை விடுத்தும், சில பாடல்களை. இடைச் செருகல்களாக மிகுத்தும் செய்யப்பட்டமை பாதுகாத்தவர்களது. ஊக்கக் குறைவால் நேர்ந்துள்ளதை உணர்ந்து கொள்ளுதல் அறிஞர்க்குக் கடனாய் உள்ளது.