ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்

பதிகங்கள்

Photo

நோக்கும் கருடன் நொடிஏ ழுலகையும்
காக்கும் அவனித் தலைவனும் அங்குள
நீக்கும் வினைஎன் நிமலன் பிறப்பிலி
போக்கும் வரவும் புரணவல் லானே.

English Meaning:
He Has No Entry, Exit and Stay

He is like the Garuda Bird, that in an instant sees all;
He protects the seven worlds entire,
He removes my Karmas,
He, the Pure One, the Birthless One,
He has Going, Coming and Mingling none.
Tamil Meaning:
(ஆகாயத்தில் இருந்து அனைத்துப் பொருளையும் காணும் கருடன் நம்மால் அறியப்பட்டது.) அதுபோலப் பரம வியோம மாகிய சிதாகாசத்தில் இருந்து கொண்டு ஏனை எல்லாப் பொருளையும் அறிந்தாங்கறியும் கருடன் சிவன் பின்பு அழிக்கப்படுவனவாகிய ஏழுலகங்களையும் இதுபொழுது அவனே காக்கின்றான். ஆகவே உலக முதல்வன் அவனே. ஆதலின், அவ்வுலகங்களில் உள்ள வினைகளையெல்லாம் நீக்குகின்ற, இயல்பாகவே பாசம் இல்லாத, எஞ்ஞான்றும், எவ்வாற்றானும் பிறப்பினுட்படாத கடவுளும் அவனே. பிறப்பு இறப்பு இன்மையால், போக்கும், வரவும் இவன் ஆகிலும், உயிர்களில் அவையேயாய்க் கலந்து நிற்றலால், அவற்றது போக்கு வரவுகளில் நீங்காது நிற்கவும் அவன் வல்லவனாவான்.
Special Remark:
``கருடன்`` என்றது, உவமையாகு பெயர். கருடன் மேற்கூறிய இயல்பினது ஆதல் பற்றியும், புள்ளரசு ஆதல் பற்றியும் இறைவனுக்கு அஃது உவமையாயிற்று. வேதத்தில் கருடனுக்கு ஒரு தனிச் சிறப்பு உண்டு. அது பற்றி, அங்கு, `கருடன்` என்பதைச் சிவனாகக் கொள்க என்றற்கும் இது கூறினார். `நோக்குதல்` என்பது பெரும்பான்மையும் காத்தல் தொழிலையே குறித்தலால், காத்தற் கடவுளாகிய மாயோனுக்குக் கருடன் ஊர்தி சொல்லப்பட்டது. `அங்குள வினை` என மாறிக் கூட்டுக. `வினையே நீக்குதற்கு உரியவன், வினையும், அதனால் வரும் பிறவியும் இல்லாதவனே என்றற்கு, `அங்குள வினையை நீக்கும் நிமலன்; பிறப்பிலி`` என்றார். `புணரவும்` என்னும் எதிர்மைறையும்மை தொகுத்தலாயிற்று. நொடித்தல் - அழித்தல். `நொடி உலகு, என் நிமலன்` - இவை வினைத் தொகைகள். அவை செயப்படு பொருள்மேல் தொக்கன. ``காக்கும்`` என்பது முற்று - எச்சமாகக் கொள்ளினும் ஆம். `தலைவனும் ஆவன்` எனச் சொல்லெச்சம் வருவித்து முடிக்க.
இதனால், சிவன் எல்லாப் பொருள்களையும் கடந்து நிற்பினும் எல்லாப் பொருளிலும் வியாபியாய் நின்று செயலாற்றுதல் கூறப்பட்டது.