ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்

பதிகங்கள்

Photo

செழுந்சடை யன்செம்பொ னேஒக்கும் மேனி
ஒழிந்தன ஆயும் ஒருங்குடன் கூடும்
கழிந்திலன் எங்கும் பிறப்பிலன் ஈசன்
ஒழிந்தில கேழினும் ஒத்துநின் றானே.

English Meaning:
He Pervades All Worlds Alike

He is of the rich matted locks,
He is of hue golden,
Unattached He is,
Yet immanent in all He is,
He is omnipresent, birthless, the Holy God,
Unintermittent He stands,
In all worlds seven.
Tamil Meaning:
சிவன் திருமேனி கொள்ளும்பொழுது சிவந்த சடை, சொம்பொன்போலும் நிறம் இவைகளையுடையனவாகவே கொள்வான். ஏனைப் பொருள்களில் ஒன்றன் வடிவிலேயும் அவன் தோன்றானாகிலும் அவை அனைத்திலும் உடன் நிறைந்து நீங்காமலே நிற்கின்றான். ஆயினும் அவை பிறப்பதுபோல அவன் பிறப்பதில்லை. அவன் ஒடுங்கல் தோன்றல்கள் இல்லாதவனாயினும் அவைகளை யுடைய உலகத்தோடு ஒட்டி நிற்கின்றான்.
Special Remark:
``ஈசன்`` என்பதை முதலிற் கொள்க. `அவன் மேனி செம்பொனே ஒக்கும்` என்க. `எங்கும் கழிந்திலன்` என மாறிக் கூட்டுக. ``எங்கும்`` என்பது, `அப்பால் எங்கும்` எனப் பொருள் தந்தது. உலகத்தின் இயல்பாகிய ஒடுங்குதல் இலகுதல்களைப் பின்னர் கூறுகின்றார் ஆதலின். `சிவனுக்கு அவையில்லை` என்றற்கு ``பிறப்பிலன்`` என்பதை முன்னே கூறினார். இலகுதல் - தோன்றுதல்.
பிற வகையான தெய்வ வடிவங்களையே சிவன் வடிவாகக் கொண்டு வழிபடின் குற்றம் என்னை? என்னும் ஐயத்தை நீக்குதற்கு இது கூறினார். இது பற்றியே இத்தகைய வடிவங்கள், `சிவனது இயற்கை வடிவங்கள்` எனப்படுகின்றன. இவ்வாறன்றி, நாயன்மார் சிலரிடம் சிவ யோகியாகவும், பிரமசாரியாகவும், சிவனடியாராகவும் வந்து சில திருவிளையாடல்களைச் செய்த வடிவங்கள் யாவும் சிவனுக்கு நிலையானவாய் இல்லாது, அவ்வப்பொழுது ஏற்ற பெற்றியாற் கொள்ளும் செயற்கை வடிவங்கள் என்க.
``அண்டம் ஆர்இரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர், அச்சுடர்
கண்டிங் கார்அறிவார்? அறிவா ரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே``
என அப்பர் பெருமான் அருளிச்செய்ததும் இக்கருத்தை விளக்கவேயாம்.
இதனால், `சருவ வியாபியாய் அகண்டனாய் நிற்கும் சிவன் கண்டனாய்த் தோன்றுமாறு இது` என்பது கூறப்பட்டது. இதன் பின் பதிப்புக்களில் காணப்படும் உணர்வும் அவனே உயிரும் அவனே`` என்னும் மந்திரம் மேல், `சிவ தரிசனம்` என்னும் அதிகாரத்தில் வந்தது.