ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்

பதிகங்கள்

Photo

நானறிந் தப்பொருள் நாட இடமில்லை
வானறிந் தங்கே வழியுற விம்மிடும்
ஊனறிந் துள்ளே உயிர்க்கின்ற ஒண்சுடர்
தானறிந் தெங்குந் தலைப்பட லாமே.

English Meaning:
Omniscience and Omnipresence in Siva-Jiva Union

There is no one place where I can seek
That Object I have known;
Taking to the astral way,
There as Perfection, will it appear;
Seeking within the body,
There a Living Light will it be;
You then becomes omniscient and omnipresent.
Tamil Meaning:
மெய்ப்பொருளை நம்மின் வேறாகத் தேடி அடையும் இடம், நான் அறிந்தவரையில் எதுவும் இல்லை. அதனை நாம் நம்மிலே அறிதல் எவ்வாறு` எனின், `பரவியோமம்` எனப்படும் திருவருளை முன்னே அறிந்து. நம் வழியை நாம் விட்டு, அதன் வழியில் நின்றால், மெய்ப்பொருள் விறகைக் கடைந்தவழித் தோன்றும் தீ, பின் அந்த விறகைத் தானி அழிப்பதுபோல. நம் அறிவிலே விளங்கிப் பின் `நாம்` என வேறு முனைத்து நிற்கும் தற்போதத்தை அழித்து, நம்மைத் தானாக்கிக் கொள்ளும். ஆகவே, கருவிக் கூட்டங்களை `நாம் அல்ல` என்று கண்டு கழித்து நாம் தனித்து நின்றவழி, முன்னெல்லாம் உயிர்ப்பு வடிவில் இருந்த அந்த ஒளி விளக்கு இப்பொழுது தானேயாய் விளங்கும். ஆகவே இம்முறையில் ஒருவன் அதனை அறிவானே ஆயின், அவன் அதனோடு ஒற்றித்துத் தனது செயற்கைத் தன்மையாகிய அணுத் தன்மையின் நீங்கித் தனது இயற்கைத் தன்மையாகிய வியாபக நிலைப்படுதல் கூடும்.
Special Remark:
``அறிந்து`` நான்கில் முதலு. அறிந்த அளவு என அறியப்பட்ட இடத்தைக் குறித்தது. ஏனைய மூன்றும், `அறிந்தவழி` என்பன திரிந்து நின்றவை, `உற விம்மிடும்` என்பதில் செயவெ னெச்சம், `மழை பெய்யக் குளம் நிறையும்` என்பது போலக் காரணப் பொருளில் வந்தது, விம்முதல் - பெருகுதல். ஆன்மாவைத் தன்னுள் அடக்கித் தாம் மேம்பட்டு நிற்றல். ``ஊன்`` என்பது, பலவகை உடம்புகளால் நிற்கும் கருவிகளைக் குறித்தது. கருவிகளில் ஒவ்வொன்றையும் `இது` எனச் சுட்டி, நான் அன்று எனக் கழித்தல் `நேதி வாக்கியம்` எனப்படும். (நேதி = ந + இதி இவ்வாறான தன்று) `நாஹம்` (நான் அது) எனப் பாவிக்க வேண்டும். `நாஹம்` என்னும் உணர்வால் பாச நீக்கமும், `சோஹம்` என்னும் உணர்வால் `சிவப்பேறும், உளவாம் என்பர். சிவன் உயிர்களின் உயிர்ப்பாய் நிற்றலை`
``என்னுளே உயிர்ப்பாய் புறம் போந்து புக்(கு)
என்னுளே நிற்கும் இன்னம்ப ரீசனே``1
என்னும் அப்பர் திருமொழியாலும் உணர்க. `அம்` எனப் புறம் போந்து `சம்` என உட்புகுந்து அசபா மந்திரம் வடிவாய் நிற்பன் என்பதை, ``ஊனங் கத்துரு வாய்உல கெல்லாம் ஓங்கா ரத்துரு வாகிநின் றானை``1 என்னும் சுந்தரர் திருமொழியால் உணர்க.
இதனால் ஆன்மா ஆணவ மலத்தால் தான் இழந்த வியாபக நிலையைத் தலைப்படுமாறு கூறப்பட்டது.