ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்

பதிகங்கள்

Photo

கடலிடை வாழ்கின்ற கௌவை யுலகத்(து)
உடலிடை வாழ்வுகண் டுள்ளொளி நாடின்
உடலிடை வைகின்ற உள்ளுறு தேனைக்
கடலின் மலிதிரைக் காணலு மாமே.

English Meaning:
Seek Inner Light and Be One in Lord

In the sea-girt world filled with sorrows,
Seek Inner Light in life here led,
The Lord resides within this body,
May you meet Him ever,
On the waves of Seas High.
Tamil Meaning:
ஆரவாரம் மிக்க கடலாற் சூழப்பட்ட உலகத்தில் உடலில் தங்கி வாழ்கின்ற ஆரவார வாழ்வின் உண்மையை ஆராய்ந்துணர்ந்தால், அந்த உடலிற்றானே தன்னோடு உடன் உறைகின்ற சிவானந்தத் தேனை கடலிடை நிரம்பப் புதிது புதிதாக எல்லையின்ற எழுந்து வருகின்ற அலைபோல்வதாகக் காண முடியும்.
Special Remark:
``கௌவை`` என்பதைக் கடலுக்கும் கூட்டுக. கடல் கௌவையுடைத்தாதல் போல, அதனால் சூழப்பட்ட உலகத்தில் வாழும் வாழ்க்கையும் ஆரவாரம் மிக்கதாய் உள்ளது - என ஒரு நயம் தோற்றுவித்தவாறு, `கடலின் ஆரவாரம் முற்றுப் பெறாமையும், பயனின்மையும் உடைத்தாதல்போல, உலக வாழ்வின் ஆரவாரவும் முற்றுப் பெறாமையும், பயனின்மையும் உடைத்து` என்பது குறிப்பு. உடலிடை வாழ்வின் உண்மையாவது சில காலமே உளதாய்ப் பின் இல்லாதொழிவது. உள்ளொளி, சிவம். அதனை நாடும் முறை மேற் கூறப்பட்டது. `மலிதிரையின்` என, ஒப்புப்பொருளதாகிய ஐந்தன் உருபு விரிக்க. தேன் தான் உள்ள இடத்தில் சிறிதளவினதாகவே இருக்கும். `இந்தத் தேன் கடல்போல எல்லை யற்றதாம்` என அதிசயம் உணர்தியவாறு. ``காணலும்`` என்னும் உம்மை சிறப்பு.
இதனால், `ஆன்மாத் தனது இயற்கைத் தன்மையாகிய வியாபக நிலையை அடைந்தவழி வியாபகமாகிய சிவத்தினது, கால, இட எல்லைகளில் ஒன்றும் இன்றிப் பெருகுகின்ற இன்ப வெள்ளத்தில் திளைக்கும்` என்பது கூறப்பட்டது.