ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்

பதிகங்கள்

Photo

உண்ணின் றொளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின் றியங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின் றியங்கிடும் வாயுவு மாய்நிற்கும்
கண்ணின் றிலங்கும் கருத்தன் தானே.

English Meaning:
He is the Spark of Life and Thought Within

He is Spark of Prana-breath within,
He is the Luminous Sun in firmament high,
He is the Breath of Wind that blows on land,
He is the Thought within all.
Tamil Meaning:
உயிர்களின் உடம்புள்ளிருந்து ஓவாது இயங்கி, உயிரை நிலைப்பிக்கின்ற பிராணனும், வானத்தில் இயங்கி உலகிற்குப் பல நலங்களை விளைவிக்கின்ற, அளவற்ற கதிர்களையுடைய பகலவனும், மண்ணில் ஒரு சிற்றிடமும் விலக்கின்றி எங்கும் இயங்கி வாழ்விக்கும் காற்றும், மற்றும் அனை்ததுப் பொருள்களுமாய் நிற்பவன் சிவன்` என்றால், உயிர்களின் அறிவினுள் விளங்கி, அவ்வறிவை அறியச் செய்பவனும் அவன்தானே? வேறுயாராய் இருக்கமுடியும்?
Special Remark:
``ஒளிரும்`` என்பது ``ஒளிர்விக்கும்`` எனப் பிறவினைப் பொருட்டாய், நிலைப்பித்தலைக் குறித்தது. உலவா - உலவி; சஞ்சரித்து. `உலவா ஒளிரும்` என மாறிக் கூட்டுக. உம்மை கொடுத்து எண்ணியது, உபலக்கணத்தால் அனைத்தையும் எண்ணிக்கொள்ளுதற்கு, ``நிற்கும்`` என்பதன் பின் `எனின்` என்பது வருவிக்க. அல்லாக்கால், மேல், ``நின்றனன்`` என்னும் மந்திர உரையிற் கூறியவாறு. `கூறியது கூறல்` என்பது படும். ``நிற்கும்`` என வேறு தொடராக்கி முடிந்தமையையும் நோக்குக. கண் - அறிவு. கருத்து அதில் தோன்றும் புலன் கருத்திற்கு ஏதுவாவதனை, `கருத்து` என்றது உபசார வழக்கு. ``தான்`` என்பது கட்டுரைச் சுவைபட வந்தது. ஏகாரம், உடன்படுவித்தற்பொருட்டாகிய வினா.
இதனால், சிவன் தனது சருவ வியாபகத் தன்மையால் அனைத்துப் பொருளையும் நிலைப்பித்து, உயிர்களின் அறிவையும் அறியச் செய்தல் கூறப்பட்டது.