ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்

பதிகங்கள்

Photo

விண்ணவ னாய்உல கேழுக்கும் மேல்உளன்
மண்ணவ னாய் வலம் சூழ்கடல் ஏழுக்கும்
தண்ணவ னாய் அதன் தண்மையில் நிற்பதோர்
கண்ணவ னாகிக் கலந்துநின் றானே.

English Meaning:
He is Light in the Eye of Jivas

He is Heavenly Being
He is beyond the worlds seven;
He is this earth too;
He is cool like seven ocean waters
That this globe girdles,
He stands in Jivas united,
As Light in their eye.
Tamil Meaning:
சிவன், பராகாயத்தில் அனைத்துலகங்கட்கும் மேலேயும் இருக்கின்றான். அப்பொழுதே மிகக் கீழே உள்ள மண்ணில் திண்மையாய் உள்ளவனாயும், அதனைச் சூழ்ந்துள்ள நீரில் தண்மையாய் உள்ளவனாயும், இவ்வாறு எல்லாவற்றிலும் அதனதன் தன்மையாய் நிற்பதுடன், உயிர்களுக் கெல்லாம் வேறோர் அறிவாயும் எல்லாவற்றிலும் கலந்து நிற்கின்றான்.
Special Remark:
`தன்மை` என்பது எதுகை நோக்கி இறுதி நிலை தொகுத்த லாயிற்று. `அதனதன்` என்னும் அடுக்கும் தொகுத்தலை பெற்றது, கண் - அறிவு. ``நிற்பதோர் கண்`` என்பது உடம்பொடு புணர்த்ததாகலின் நிற்றலையும், கண் ஆதலையும் வேறு வேறாகக் கொள்க. ``தண்ணவன், கண்ணவன்`` என்பவற்றில், ``அவன்`` என்பன பகுதிப் பொருள் விகுதிகள். எழுவாய் முன் மந்திரத்தி -னின்றும் வந்தது.
இதனால், சிவன் தனது வியாபகத் தன்மையால் மேலான வற்றிற்கெல்லாம் மேலாயும், கீழானவற்றிற்கெல்லாம் கீழாயும் நிற்றல் கூறப்பட்டது. ``மேலோடு கீழாய் விரிந்தோன் காண்க``1 என்னும் திருவாசகத்தையும் காண்க.