ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்

பதிகங்கள்

Photo

புவனா பதி மிகு புண்ணியன் எந்தை
அவனேய உலகின் அடற்பெரும் பாகன்
அவனே அரும்பல சீவனும் ஆகும்
அவனே இறைஎன மாலுற்ற வாறே.

English Meaning:
He is Jiva and Master of Jiva

He is Lord of Worlds,
The Holy One, my Father,
He is Master Mahout,
Of Jivas all,
He is Jivas themselves too,
He is the Lord,
Whom all in endearment hold.
Tamil Meaning:
பெரியோர்கள் சிவனிடத்திலேயே காதல் மிக்கவர்களாய் அவனையே நோக்கி நிற்றற்குக் காரணம், `எல்லாப் புவனங்கட்கும் அதிபதி அவனே; புண்ணியத்தின் பயனாய்க் கிடைப்பவனும் அவனே, யாவர்க்கும் தந்தையும் இவனே; உலகத்தை வலிமை வாய்ந்த தலைமையோடு நடத்துவோனாகி அதனை நடத்துபவனும் அவனே; எண்ணித்தொகை கூறுதற்கு இயலாத அனைத்துயிர்களும் அவனே; ஆகலின் அவன் ஒருவனே கடவுள்` என உணரும் மெய்யுணர்வேயாகும்.
Special Remark:
`சிவன்பால்` என்பதும், `பெரியோர்கள்` என்னும் தோன்றா எழுவாயும் வருவித்து, ``மால் உற்ற ஆறு`` என்பது தொடங்கி உரைக்க.
புவனங்களை, ``புவனா`` எனப் பெண்பாலாகக் கூறினார். நிலத்தைப் பெண்ணாகக் கூறும் வழக்குப் பற்றி. `புவனா` என்பாள் ஒரு சத்தி என்றலுமாம். மிகுதி, பன்மை குறித்து நின்றது. ``என`` என்னும் செயவெனெச்சம், `என்பதனால்` என்னும் பொருட்டாய், ``மாலுற்ற ஆறு`` என்னும் எழுவாய்க்குப் பயனிலையாயிற்று. `பெரியோர்கள் சிவனிடத்துச் செலுத்தும் அளவிலா அன்பு, தலைவி ஒருத்தி தன் தலைவனை அவனை யின்றித் தான் அமையாளாய்க் காதலிப்பதனோடு ஒத்தது` என்றற்கு அதனை, `அன்பு, காதல்` என்பவற்றுள் ஒரு சொல்லாற் கூறாது. ``மால்`` என்னும் சொல்லாற் கூறினார். மால் - மயக்கம், மோகம்.
இதனால், மெய்யுணர்ந்தோர், சிவனே சருவ வியாபகனும், சருவேசுரனும் ஆதலையறிந்து அவன்பால் கரை கடந்த காதலை யுடையாராதல் கூறப்பட்டது.