ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்

பதிகங்கள்

Photo

உறுதியி னுள்வந்த உன்வினைப் பட்டும்
இறுதியின் வீழ்ந்தார் இரணம தாகும்
சிறுதியின் உள்ளொளி திப்பிய மூர்த்தி
பெறுதியின் மேலோர் பெருஞ்சுடர் ராமே.

English Meaning:
Jiva Becomes a Flaming Light

Entangled in crusted Karma;
That with their birth came;
They in the end realized Him,
And golden became;
He is the Spark within the spark of light,
The Being Divine,
If you reach Him,
A flaming Light you shall be.
Tamil Meaning:
முன் மந்திரத்தில் கூறியபடி சிவன் எல்லா உயிர் களோடும் உடனாய் நிற்பினும், மாயா காரியங்களில் வைத்துள்ள உறுதியான நம்பிக்கையால் உளவாகின்ற வினைகளில் அகப்பட்டு உழன்ற போதிலும் முடிவில் தன் அடியில் வந்து, `அடைக்கலம்` என அடைந்தவர்க்கே பொன்போலப் பயன்படுவான். சிறியதிலும் சிறியதாய் விளங்குகின்ற ஒளிவடிவாகிய அவன், தன்னைப் பெற்றதனால் மேன்மை பெற்றவர்கட்கே எல்லையில்லா ஒளியாய், எங்கும் நிறைந்து விளங்குவான்.
Special Remark:
``உறுதியினுள்`` என்பதில் `உள்` என்பது மூன்றாவதன் பொருளில் வந்த வேற்றுமை மயக்கம். உள் வினை - உளவாம் வினை. `இரணியம்` என்னும் வடசொல். `இரணம்` எனத் திரிந்து நின்றது. `அறுதி, பெறுதி` என்பனபோல, ``சிறுதி`` என்பது திவ்விகுதி பெற்ற தொழிற் பெயர். `சிறுத்தல்` என்பது அதன் பொருள். அஃது ஆகு பெயராய், அதனையுடைய பொருளைக் குறித்தது. ``ஒளி மூர்த்தி`` என்பது, `ஒளித்த மூர்த்தி` என வினைத்தொகை. `மேலோர்க்கு` என்னும் நான்கன் உருபு தொகுக்கப்பட்டது.
இதனால், சிவன் சருவ வியாபியாயினும் மலம் நீங்கப்பெற்றார்க்கே அவன் வியாபகன் ஆதல் கூறப்பட்டது.