ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்

பதிகங்கள்

Photo

ஏயும் சிவபோகம் ஈதன்றி ஓர் ஒளி
ஆயும் அறிவையும் மாயா உபாதியால்
ஏய பரிய புரியுந் தனைஎய்தும்
சாயும் தனது வியாபகந் தானே.

English Meaning:
When Jiva Unites in Siva

Siva Bhoga there will be;
Like it will be added a Light
That suffuses sentient knowledge;
The body by Mayaic experience harassed,
Will yours be, controlled full;
The Jiva`s pervasiveness
Will everywhere spread.
Tamil Meaning:
ஆன்மா, பரமுத்தி நிலையில் விளைகின்ற சிவபோகத்தை நுகர்தலாகிய இஃது ஒன்றைத்தவிர, அந்தப் போகத்தைத் தருகின்ற சிவத்தைத் தனக்கு வேறாக வைத்து ஆராய்கின்ற அறிவையும், மாயா மலத்தின் காரியமாய்ப் பொருந்திய அதிசூக்கும, சூக்கும, தூல உடம்புகளைப்பற்றி, புறஞ்செல்லுதலையும் உடையதாகின்ற வரையில் அதனது இயற்கைத் தன்மையைத் தலைப்பட்ட வியாபக நிலை அதற்கு நிலைக்கமாட்டாது.
Special Remark:
`சிவனைப்போல எங்குமாம் வியாபகமே ஆன்மாவின் இயற்கைத் தன்மை. ஆயினும் சிவனைப்போல ஆன்மாச்சூக்கும சித்தாகாது. தூல சித்தாய் இருத்தலின், அதனை அநாதியே ஆணவ மலம் பற்றி, அணுத்தன்மை அடையச் செய்தது. எனவே, ஆன்மாவின் இயற்கைத்தன்மை அடையச் செய்தது. எனவே, ஆன்மாவின் இயற்கைத்தன்மை வியாபகமும், ஆணவ மலம் காரணமாக அடைந்த செயற்கைத் தன்மையே அணுத்தன்மையும் ஆதலால், ஆணவம் நீங்கிய பொழுது, ஆன்மாத் தனது இயற்கையாகிய வியாபகத் தன்மையை எய்தும். ஆணவ மலம் காரணமாகவே ஆன்மாவை மாயையும், கன்மமும் வந்து பற்றின ஆகலான், ஆணவ மலம் நீங்கினாலும் அதன் வாசனை நீங்காத வரையில் ஆன்மாவிற்கு அது அடைந்த இயற்கைத் தன்மையாகிய வியாபகத்தன்மை அதற்கு நிலையாதாக, மாயை கன்மங்களைப் பற்றித் தனது முன்னைச் செயற்கைத் தன்மையாகிய அணுத்தன்மை உடையதாகும்` என்பதே இம்மந்திரத்தால் கூறப்பட்ட பொருளாகும். ஆணவ மலத்தின் வாசனையே ஆன்மாவைச் சிவபோகத்தை நுகர்தலினின்றும் நீங்கிச் சிவனைத் தனக்கு வேறாக வைத்து ஆராயத்தூண்டும். அதனாலே ஆன்மா மாயா கருவிகளையும், அவற்றின செயற்பாட்டிற்கு ஏதுவான கன்மத்தையும் உடையதாகும் என்க. ஏய்தல் - பொருந்துதல். ஓர் ஒளி - சிவம். `ஒளியை` என உருபு விரிக்க. உபாதி - செயற்கை; குற்றம். ``பரிய`` என்பதில் `பரியவற்றை` என இரண்டாவது விரிக்க. `பரியவற்றைப்பற்றி` என ஒருசொல் வருவிக்க. ``சாயும்`` என்பதை இறுதியிற்கூட்டி முடிக்க. சாய்தல் - மெலிதல்; நீங்குதல். தான், ஏ அசைகள்.