ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்

பதிகங்கள்

Photo

தேவனு மாகுந் திசைதிசை பத்துளும்
ஏவனு மாய்விரி நீருல கேழையும்
ஆவனு மாம் அமர்ந் தெங்கும் உலகினும்
நாவனு மாகி நவிற்றுகின் றானே.

English Meaning:
His is the Voice that Voice All

He is the Lord,
He is all in directions ten,
He is the seven expansive sea-girt worlds too,
Thus Pervading,
He is the Speaker that speaks all.
(Thus the Jiva Siva Becomes.
Tamil Meaning:
இன்னும், முன் மந்திரத்திற்கூறிய பரஞ்சுடராகிய சிவன், எல்லாத் திசைகளிலும் அதுவதற்குத் தலைவனாய் நிற்கின்றான். அவைகள் உள்ள எல்லாப் பொருள்களுமாய் இருக்கின்றான்; ஏழு கடல்களால் சூழப்பட்ட ஏழு தீவுகளையும் ஆக்குபவனுமாகி, அவை அனைத்திலும் நிறைந்து அவற்றை நிலைக்கச் செய்பவனுமாய், அங்குள்ளாரது நாவில் அவையாய்க் கலந்து சொற்களைச் சொல்கின்றான்.
Special Remark:
அடுக்கு, `அதுவது` எனத் தனித்தனியைச் சுட்ட வந்தது. `ஒவ்வொரு திசையையும் காக்கும் காப்பாளர் வேறு வேறாகச் சொல்லப்படினும் அவரிடத்தும் சிவனே வியாபியாய் நின்று காவல் புரிவிக்கிறான்` என்பது கருத்து. சிவாகமங்கள் பத்துத் திசைகளிலும் ஒவ்வொன்றிலும் பத்துப் பத்து உருத்திரர் இருந்து திசை காப்பாளரைச் செலுத்துகின்றனர்` என்று கூறுதலோடு, அவர்களின் பெயர்ப் பட்டியலையும் தருதற்கு இதுவே கருத்து என்க. `எவன்` என்னும் வினாப் பெயர் முதல் நீண்டு நின்றது. ``விரிநீர் உலகு`` என்றதனால், ``உலகு`` என்றது நிலவுலகத்தையாயிற்று. காட்சிப் பொருளாய நில வுலகத்தின் பகுதிகளை வகுத்துக் கூறியதனால், உரைப்பொருளாய பிற உலகங்களை ஆக்குதலும் தானே பெறப்பட்டது. `ஆக்குவன்` என்பது இடைக்குறைந்து நின்றது. அமர்தல் - தங்குதல். இதன் பயன் அப்பொருள்கள் நிலைபெறுதலாம். `எங்குமாம் உலகினும்` என ஆக்கம் விரிக்க. ``எங்கும்`` என்றது ஆகாயத்தை உணர்த்திற்று. நாவன் - நாவே வடிவானவன். `நவிற்றுதல்` என்பது பிறவினை வாய்பாடாய்த் தன்வினையையும் குறிப்பதொன்று. ``நம்பு வார்அமர் நாவின் நவிற்றினால் வம்பு நாண்மலர் வார்மது ஒப்பது``1 என்பதிலும் இவ்வாறு வந்தமை காண்க. ``நட்பாடல் தேற்றாதவர்`` 2 என்றார் போல்வன காண்க. நாவாய் நின்று நவிற்றுதல், பொதுப்பட எல்லார் மொழியையும் குறித்தலுடன் அருளாளர்களது நாவில் இனிது விளங்கி நின்று அருளிச்செய்யும் உறுதிச் சொல்லைச் சிறப்பாகக் குறிப்பதாம். ``எனதுரை தனதுரையாக``3 என்னும் அருள் மொழியை ஓர்ந்துணர்க.
இதுவும் சிவனது சருவ வியாபகத்தையே கூறியது.