ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 29. சருவ வியாபகம்

பதிகங்கள்

Photo

புலமையில் நாற்றம் இல் புண்ணியன் எந்தை
நலமையில் ஞான வழக்கமும் ஆகும்
விலமையில் வைத்துள வேதியர் கூறும்
பலமையில் எங்கும் பரந்துநின் றானே.

English Meaning:
He Comprehends All

The Holy One,
Devoid of odour of Senses Five,
My Father,
The Bounteous One, all Jnana gives;
In the precious wisdom of Vedic sages
Diverse He stands,
Comprehending all.
Tamil Meaning:
எங்கள் தந்தையாகிய சிவபெருமான், வெறும் நூலறிவில் மட்டும் தோன்றுபவன் அல்லன்; தவத்தில் தோற்றஞ் செய்பவன். அப்பால் அத்தவத்தின் பயனாகப் பெறப்படுகின்ற நன்மையுடைய ஞானத்தில் இடையறாது தொடர்ந்து விளங்குபவனும் ஆவான். இனி, `இன்ன செயலுக்கு இன்ன பயன்` எனப் பண்ட மாற்றுப் போலக் கொண்டு வேதியர்கள் கூறுகின்ற காமிய கன்மங்களிலும் எங்கும் நிறைந்து வேதியர்கள் அவர்கட்குப் பயனளித்து வருகின்றான்.
Special Remark:
நாற்றம் - தோற்றம். நாறுதல் - முளைத்தல். `நூலுணர் வுணரா நுண்ணியோன் காண்க``1 என்னும் திருவாசகத்தை இங்கு நினைவு கூர்க. `நன்மை` என்பது எதுகை நோக்கி இடையே அகரம் பெற்று, ``நன்மை`` என வந்தது. `நன்மையின்` எனச் சாரியை நிற்க இரண்டன் உருபு, தொக்கது. `நன்மையைப் பயனாக உடைய ஞானம்` என்க. நன்மை, இங்கு வீடுபேறு வழக்கம் - தொடர்ச்சி, `விலைமை, என்பது, எதுகை நோக்கி, ``வில்மை`` என நின்றது. `பண்ட மாற்றுத் தன்மை, என்பது பொருள். பலம் - பயன். பலமை - பலன் தரும் தன்மை. அஃது ஆகுபெயராய், அதனையுடைய கன்மங்களைக் குறித்தது.
இதனான், சிவன் சருவ வியாபியாய் நிற்பினும் அவரவருக்கு ஏற்ற பெற்றியால் அருள்புரியுமாறு கூறப்பட்டது.