ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பதிகங்கள்

Photo

நெஞ்சு சிரம் சிகை நீள்கவசம் கண் அம்பாம்
வஞ்சமில் விந்து வளர்நிறம் பச்சையாம்
செஞ்சுறு செஞ்சுடர்ச் சேகரி மின்ஆகும்
செஞ்சுடர் போலுந் தெசாயுதந் தானே.

English Meaning:
Form of Sakti in Sadasiva

The breast, the head, the tresses long,
The eyes, the fore-head mark, the armour
These the Sakti`s are
Of glowing green hue
As lightning is She, the dazzling crowning Sakti
Fiery bright, Her ten Weapons.
Tamil Meaning:
பச்சை நிறத்தை உடையவளாய்ச் சிவனாகிய கதிரவனுக்கு அவனது மிகச் செப்பமாகப் பொருந்திய கதிராய் விளங்குகின்ற பராசத்தியாகிய பெண்டு சதாசிவனுக்கு மந்திர வகையால் (மேற்கூறிய ஐந்து முகங்களும், உச்சி முதலிய உறுப்புக்களுமாய் நிற்றலேயன்றி,) இருதயம், சிகை, சிரம், கவசம், நேத்திரம், அத்திரம் என்னும் உறுப்புக்களாயும், அம்மூர்த்தியின் பத்துக் கைகளிலும் உள்ளனவாக மேற்கூறப்பட்ட பகலவன் போலும் ஒளியினையுடைய பத்துப் படைக்கலங்களாயும் நிற்பள்.
Special Remark:
``பச்சையாம் ... ... மின்`` என்பதனை முதலிற் கொண்டு, ``ஆகும்`` என்பதனை ``தெசாயுதத்திற்``கும் கூட்டி, `மின், விந்து ஆகும்: தெசாயுதம் ஆகும்` என உரைக்க.
விந்து - சுத்த மாயை, அஃது ஆகுபெயராய் அதன் காரியமாகிய மந்திரத்தைக் குறித்தது. இவற்றை ``மந்திரம்`` எனக் கூறிய இதனானே மேற்போந்த ஐந்து முகங்களும், உச்சி முதலிய உறுப்புக்களும் மந்திரங்களே ஆயின. அவற்றைக் குறிக்கும் மந்திரங்கள் `பஞ்சப் பிரம மந்திரம்` என்றும், இங்குக்கூறிய மந்திரங்கள் `சடங்க மந்திரம்` என்றும் சொல்லப்படும். இப் பதினொன்றும் கூடிய தொகுதி. `சங்கிதா மந்திரம்` எனப்படும். சைவத்தில் சிவ மூல மந்திரம் தலையானதாய் நிற்க இப்பதினொரு மந்திரங்களும் இன்றியமையாத் துணை மந்திரங்களாய் நிற்கும். இவற்றுள் பிரம மந்திரங்கள் ஐந்தும் `நம` என்னும் முடிவினதாக, சடங்க மந்திரங்கள் `நம` என்பதனோடு வேறு முடிவுகளையும் ஏற்ற பெற்றியால் உடையனவாகும்.
பஞ்சப் பிரம மந்திரங்கள் ஐந்தொழிற் சத்திகளேயாதல் போலச் சடங்க மந்திரங்கள் சிவனது எண்குணங்களில் தூய உடம்பின னாதல் இயல்பாகவே பாசங்களின் நீங்குதலிலும், இயற்கையுணர்வு முற்றுணர்விலும் அடங்க ஆறாய் நிற்கும் குணங்களேயாகும். எண் குணங்களில் ஆறினைச் சிறப்பாக எடுத்து இறைவனை, `சுத்த சாட் குண்ணியன்` என்று கூறுவர்.
`செஞ்செவ்வுறு` என்பது குறைந்து நின்றது. செஞ்செவ் - மிக்க செப்பம். சேகரி மின் - தலைவியாய பெண்டு.
இவை இரண்டு மந்திரங்களாலும் முகமாய் நிற்கின்ற சத்திகள் பிறவாயும் நிற்றல் கூறப்பட்டது. இவற்றானே பிரம மந்திரம், அங்க மந்திரங்களது உண்மையும் கூறப்பட்டனவாம்.