ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பதிகங்கள்

Photo

இருளார்ந்த கண்டமும் ஏந்து மழுவும்
சுருளார்ந்த செஞ்சடைச் சோதிப் பிறையும்
அருளார்ந்த நெஞ்சத்தெம் ஆதிப் பிரானைத்
தெருளார்ந்தென் னுள்ளே தெளிந்திருந் தேனே.

English Meaning:
Sadasiva is Our Lord

``Sadasiva is our Lord``—
Say this times hundred;
Anything else you try to say,
He will still be beyond it;
He suffers not those Gods
Who themselves exalt;
He, who my heart entered.
Tamil Meaning:
அருளே நிறைந்த உள்ளத்தை உடையவனாகிய கடவுளை யான் எனது உள்ளத்திலே, கறுத்த கண்டத்தையும், மழு ஏந்திய கையையும், சுருண்ட சடையாகிய முடியையும், ஒளியை யுடைய பிறையாகிய கண்ணியையும் உடையவனாக நன்கு காண்கின்றேன்.
Special Remark:
`அருவுருவனாகிய சதாசிவன் உருவனாய் விளங்கும் பொழுது இத்தன்மையனாய் விளங்குதலை யான் அநுபவத்தில் காண்கின்றேன்` என்பதாம். அதனால், `கடவுளை இவ்வுருவத்தில் கண்டு வழிபடுதலும் சதாசிவ வழிபாடேயாகும்` என்பது உணர்த்தியவாறு. `கடவுள் உருவத்திருமேனியனாய் விளங்கும் பொழுது இவ்வாறே நிற்பன்` என்பதை,
அண்டம் ஆரிரு ளூடு கடந்தும்பர்
உண்டு போலும்ஓர் ஒண்சுடர்; அச்சுடர்
கண்டிங் காரறிவார்! அறிவா ரெலாம்
வெண்டிங்கட் கண்ணி வேதியன் என்பரே. -தி.5 ப.97 பா.2
என்னும் அப்பர் திருமொழியாலும் அறிக.
சந்திரசேகரர், பிட்சாடனர் முதலிய திருமேனிகள் அவ்வப் பொழுது கொண்டு விடப்பட்ட வடிவங்களாக அவற்றை `மாகேசுர பேதங்கள்` எனவும், இங்குக் கூறிய இவ்வடிவமே `மகேசுர இயற்கை வடிவம்` எனவும் எங்கும் கூறப்படுதலையும், `பிரளயாகலருக்கு ஞானத்தை முன்னின்று உணர்த்தும் பொழுது இவ் வடிவத்தில் நின்றே சிவன் உணர்த்துவன்` எனவும் எங்கும் கூறப் படுதல் காண்க.
கறைக் கண்டம், மழுப்படை, சடைமுடி, பிறைக் கண்ணி இவற்றைக் கூறியதனானே நாற்றோள், முக்கண் முதலிய பிறவும் கொள்ளப்படும். ``பிறையும்`` என்பதன் பின் `உடையவனாக` என்பது சொல்லெச்சமாய் எஞ்சி நின்றது.
இதனால், அருவுருவமாகிய சதாசிவ லிங்கம் உருவமாய் விளங்குமாறு கூறப்பட்டது. `அனைத்தும் சதாசிவ லிங்கமே` என மேற் கூறியதனை நினைக.