ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பதிகங்கள்

Photo

ஆகின்ற சத்தியின் உள்ளே கலைநிலை
ஆகின்ற சத்தியின் உள்ளெ கதிரெழ
ஆகின்ற சத்தியின் உள்ளே அமர்ந்தபின்
ஆகின்ற சத்தியுள் அத்திசை பத்தே.

English Meaning:
When Sakti Evolves

Within the Becoming Sakti the Kalas repose
Within the Becoming Sakti their rays emanate
Within the Becoming Sakti the Lord His seat takes
Within the Becoming Sakti the directions ten as Space appear.
Tamil Meaning:
அறிவு மாத்திரமாய் நிற்கின்ற சிவத்தினின்றும் செயல் வடிவாய்த் தோன்றுகின்ற சத்தியின் ஒருகூறு தோற்றமுறையில் சாந்தியதீதை முதலிய ஐந்து கலைகளாகின்ற ஆதார சத்திகளாய் நிற்கும். அந்தச் சத்திகளினின்றும் `இலயம், போகம், அதிகாரம்`, என்னும் ஆதேய சத்திகள் ஏற்ற பெற்றியால் தோன்ற, அந்தச் சத்திகளிலே சிவம் அதுவதற்கு ஏற்றவாற்றால் பொருந்தி நிற்க, அதன்பின் அந்த இலயம் முதலிய சத்திகளாலே அனைத்துலகங்களும் தோன்றும்.
Special Remark:
முதலடிக்கண் வருவித்துரைத்தன ஆற்றலால் கொள்ளக் கிடந்தன.
சாந்தியதீதை முதலிய ஐந்து சத்திகளாவன, `சாந்தியதீதை, சாந்தி, வித்தை, பிரதிட்டை, நிவிர்த்தி` என்பன. இவற்றுள் முதல் இரண்டு கலைகளில் இலயசத்தி தோன்றும். நடுவில் உள்ள ஒன்றின் முற்கூற்றில் போகசத்தி தோன்றும். அதன் பிற்கூற்றிலும், ஏனை இரு கலைகளிலும் அதிகார சத்தி தோன்றும். சத்தியை, ``கதிர்`` என்றார். அவற்றுள் சிவன் இலய சத்தியில் `சத்தன்` எனவும், போக சத்தியில் `உத்தியுத்தன்` எனவும், அதிகார சத்தியில், `பிரவிருத்தன்` எனவும் பொருந்தி நிற்பான். அங்ஙனம் பொருந்தி நின்று அச்சத்திகளை அவன் தூண்டுதலினாலே உலகங்கள் தோன்றி நின்று விளங்கும். அனைத்துத் திசைகளையும் எண்ணியவழி அவை பத்தாம் ஆதலின் ``அத்திசை பத்து`` என்றார் `பத்தும்` என்னும் முற்றும்மை தொகுக்கப்பட்டது. அதன்பின் `ஆகும்` என்பது அவாய்நிலையாய் நின்றது, அமர்தலுக்கு, `சிவம்` என்னும் வினைமுதல் வருவிக்கப்பட்டது.
இதனால், சதாசிவமே உலகிற்கு முதலாதல் கூறப்பட்டது. அஃதே சிவபேதம் அனைத்தும் ஆதலை முன்னை மந்திரத்துட் கூறியதனைக் கருதுக.