ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பதிகங்கள்

Photo

 தத்துவ மாவது அருவம் சராசரம்
தத்துவ மாவது உருவம் சுகோதயம்
தத்துவ மெல்லாம் சகலமு மாய்நிற்கும்
தத்துவ மாகும் சதாசிவந் தானே.

English Meaning:
Sadasiva is Tattva (Truth) Real

Formless is the Tattva primal
Formed, it is the world, animate and inanimate;
A source of pleasure then indeed it is;
Tattva is all and pervasive,
Sadasiva is Tattva (Truth) Real.
Tamil Meaning:
`தத்துவம்` எனப்படுவன காரியப் பொருள்கள் அனைத்திற்கும் மூலங்கள் ஆதலின், அவையே `சரம், அசரம்` என்னும் இருதிறப் பொருளாயும் பரிணமிக்கும். தத்துவங்கள் யாவும் உயிர்கட்குத் துன்பம் நீங்கி, இன்பம் தோன்றுதற் பொருட்டே உள்ளனவாம், இவ்வாறு அனைத்துப் பொருளுமாய் நிற்கின்ற அனைத்துத் தத்துவங்களும் ஆவது சதாசிவலிங்கம்.
Special Remark:
``அருவம், உருவம்`` என்பன இங்கு, `காரணம், காரியம்` என்னும் பொருளவாய் நின்றன. ``ஆவது`` இரண்டும் எழுவாய் உருபாய் வந்தன. அவை இனம் பற்றி வந்த ஒருமை. ``சராசரம், சுகோதயம்`` எனப் பாற்படுத்து ஓதினார்.
``தத்துவ ரூப மாகும் தரும்அரு உருவ மெல்லாம்;
... ... ... சகலமும் தத்துவங்காண்``
எனவும்,
எல்லாமாய்த் தத்துவங்கள் இயைந்ததென் அணுவுக்கென்னில், தொல்லாய கன்ம மெல்லாம் துய்ப்பித்துத் துடைத்தற் கும்பின் நில்லாமை முற்று வித்து நீக்கவும், கூடி நின்ற
பொல்லாத ஆண வத்தைப் போக்கவும் புகுந்த தன்றே. -சிவஞான சித்தி சூ. 2. 71, 79
எனவும் போந்த சிவஞான சித்தி இங்கு நினைக்கத் தக்கது. ``ஆகும்`` என்பது முற்று.
இதனால், `சதாசிவ லிங்கம் சிறப்புடைத் தாதற்குக் காரணம் அஃது அனைத்துத் தத்துவமுமாய் நிற்றலே` என்பது கூறப்பட்டது.