ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பதிகங்கள்

Photo

நாலுள்நல்ஈ சானம் நடுவுச்சி தானாகும்
தாணுவின் றன்முகந் தற்புரு டம்மாகும்
காணும்அ கோரம் இருதயம் குய்யமாம்
மாணுறு வாமம் ஆம் சத்திநற் பாதமே.

English Meaning:
How Sakti dwells in the Five faces of Sadasiva

In the shining Isana face is Sakti`s Crown;
In the Tatpurusha face is Her Visage
In the Aghora is Her Heart and Waist;
In the Vama face are Her Feet blessed.
Tamil Meaning:
கிழக்கு முதலிய நான்கு திசைகளில் உள்ள முகங்கட்கு நடுவேயுள்ள முகமாய் நிற்கின்ற `ஈசானம்` என்னும் சத்தி சதாசிவனுக்கு அந்த முகமாய் நிற்றலேயன்றி, நடுத்தலையாகியும் நிற்கும். அவ்வாறே ஏனைய, `தற்புருடம், அகோரம், வாமதேவம், சத்தியோ சாதம்` என்னும் முகமாய் நிற்கின்ற சத்திகளும் அம்முகங்க ளாதலேயன்றிச் சதாசிவனது `முகம், இருதயம், குய்யம், பாதம்` என்னும் அவ்வுறுப்புக்களாயும் நிற்கும்.
Special Remark:
சத்தி சிவனுக்கு ஐந்து முகங்களாயும் `உச்சி, முகம், இருதயம், குய்யம், பாதம்` என்னும் உறுப்புக்களாயும் நிற்றல் மந்திர ரூபமாயும் என்க. அதனால் ஐந்து முகங்களும், உச்சி முதலிய உறுப்புக்களும், இன்னும் அடுத்த மந்திரத்துக் கூறப்படுகின்ற சிகை முதலிய உறுப்புக்களும் கருதுகோள் (பாவனை) வகையால் அமைதல் விளங்கும்.
சதாசிவலிங்க வழிபாட்டில் வாய் மந்திரத்தைச் சொல்ல, மனம் அவற்றிற்கு ஏற்ற பாவனையைக் கொள்ள, கை கிரியையினைச் செய்ய, இவ்வாறு `மந்திரம், கிரியை, பாவனை` என்னும் மூன்றானும் அது நிகழ்வதாகும்.
இதனுள் உயிரெதுகை வந்தது.