ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 4. சதாசிவ லிங்கம்

பதிகங்கள்

Photo

கூறுமின் நூறு சதாசிவன் எம்மிறை
வேறுரை செய்து மிகைப்பொரு ளாய்நிற்கும்
ஏறுரை செய்தொல் வானவர் தம்மொடும்
மாறுசெய் வான்என் மனம்புகுந் தானே.

English Meaning:
Sadasiva is Our Lord

``Sadasiva is our Lord``—
Say this times hundred;
Anything else you try to say,
He will still be beyond it;
He suffers not those Gods
Who themselves exalt;
He, who my heart entered.
Tamil Meaning:
சதாசிவனாய் நிற்பவனைத் துதியாது வேறு சொற்களைச் சொல்லிக் காலம் போக்குபவரும், அந்தச் சதாசிவமூர்த்தி அவரவர்க்கு ஏற்புடைத்தாக அளித்து ஏவுகின்ற தொழில்களைச் செய் பவரும் ஆகிய வானவரது நெறியோடு எனது நெறிமாறுகொளச் செய்தற் பொருட்டு அவன் எனது நெஞ்சத்தில் புகுந்தான். ஆதலின் அவனே நாம் வழிபடும் கடவுளாயினான். (என்வழி நிற்பீராயின்) நீங்களும் அவனது திருப்பெயர்கள் பலவற்றையும் கூறி அவனை வழிபடுங்கள்.
Special Remark:
`சதாசிவன் எம் இறை; கூறுமின் நூறு எனமாற்றி இறுதிக்கண் வைத்துரைக்க, ``கூறுமின்`` என்றதனால், ``நூறு`` என்பது பெயர்களாயிற்று, `அவற்றைக் கூறுமின்` என வருதலால், ``வேறு`` அவையல்லாத பிறவாயிற்று. ``உரை செய்தல்`` இரண்டினுள் முன்னது `சொல்லுதல்` எனவும், பின்னது `ஏவுதல்` எனவும் பொருள் தந்தன. ``மிகைப் பொருள்`` என்றது, `பயனில் பொருள்` என்றவாறு. சிவனது திருநாமங்களைச் சொல்லாது பிறவற்றையே சொல்லுதலால் ஆன்ம லாபத்தையிழத்தல் பற்றி வானவரை, ``மிகைப்பொருள்`` என்றார். `நிற்கும் வானவர், தொழில் வானவர்` எனத் தனித்தனி இயையும், ஏறு - ஏறுதற்குரியன; பொருந்துவன. `உரை செய்த தொழிலைச் செய்யும் வானவர்` என்க. அவரது நெறியெல்லாம் பிறவி நெறியாகலின் வீட்டு நெறி அதனின் மாறும் நெறியாயிற்று. அதனைச் செய்தலாவது, தருதல். ``செய்வான்``, வானீற்று வினையெச்சம். மனம் புகுதலால் அந்நெறி எய்தினமை பற்றி, செய்வான் புகுந்தான் என்றார். பிறரெல்லாம் வந்த நெறியையே தருவாராக, சிவன் ஒருவனே வீட்டு நெறியைத் தருவோனாதல் பற்றி, ``சதாசிவன் எம் இறை`` என்றார்.
இதனால், `சதாசிவ வழிபாடொழிந்த செயல்களைச் செய்தலால் தேவரும் பந்தத்தின் நீங்காமையால், அதனின் நீங்க விரும்புவோர் சதாசிவ வழிபாடே செய்தல் வேண்டும்` என்பது கூறப்பட்டது.