ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி

பதிகங்கள்

Photo

ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் பராபரம்
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் சிவகதி
ஒன்றிநின் றுள்ளே உணர்ந்தேன் உணர்வினை
ஒன்றிநின் றேபல ஊழிகண் டேனே.

English Meaning:
Transcendental Awareness

Meditating in oneness, I visioned Paraparam,
Meditating in oneness, I realized Siva-State
Meditating in oneness, I experienced Awareness Transcendental
Meditating in oneness, I witnessed aeons upon aeons.
Tamil Meaning:
நான் வெளியே எங்கெங்கு ஓடி ஓடி அலைந்ததை விட்டு, எங்கும் செல்லாது என்னளவுக்கு நின்று, என்னிடத்திலே என் அறிவை ஒன்ற வைத்து என்னுள் தானே நோக்கினேன். அப்பொழுது பரம்பொருள் காட்சிப்பட்டு பின் அதனை அடைந்து இன்புறும் வழியும் தோன்றிற்று. அவ்வழியாவது என் அறிவுக்கறிவாய் இருந்து பெத்தம், முத்தி இரண்டிலும் அறிவித்து வரும் திருவருளை அறிவாற் பற்றுதல். ஆயினும் இவைகளை நான் உணர்தற்கு எனக்குப் பல ஊழி சென்று விட்டன.
Special Remark:
`சிவம்` என்பது, இங்கு, `பேரின்பம்` எனப்பொருள் தந்தது. `கதி, மார்க்கம், வழி` என்பன ஒரு பொருட் சொற்கள். `பேரின்ப வழி` என முன்னர்ப் பொதுவாகச் சுட்டிப் பின்னர் அதனை ``உணர்வு`` என விளக்கியருளினார். உணர்வு - உணர்வுக்கு உணர்வு; திருவருள். ``தம் உணர்வின் தமி அருள்``l என்றார் சிவஞான போதத்திலும், `திருவருளின் இடையறா உதவியை அறிந்து, அதன்கண் இடையறாப் பேரன்பு செய்தலே பேரின்ப வழி` என்பதை, ``அயரா அன்பின் அரன்கழ் செலுமே``9என்னும் சிவஞான போதத்தாலும் அறிக.
``தேடிக் கண்டு கொண்டேன் - திரு
மாலொடு நான்முகனும்
தேடித் தோடொணாத் தேவனை என்னுள்ளே
தேடிக் கண்டு கொண்டேன்``3
என அப்பர் பெருமானும் தாம் சிவனைக் கண்டுகொண்ட முறையை இங்ஙனமே அருளிச் செய்தவாறு அறிக.
``பல்லூழி காலம் பயின்றானை அர்ச்சித்தால்
நல்லறிவு சற்றே நகும்``
என்ப ஆகலான் இந்நிலை வாய்த்தற்கு ஒரு பிறப்பில் செய்யும் தவம் போதாது; பல பிறப்புக்களில் தவம் செய்தல் வேண்டும் ஆகலின், ``ஒன்றி நின்றேன் பல ஊழிகண்டேனே`` என்று அருளியதன் உண்மையை உணர்க. இதில் சொற்பொருட் பின்வருநிலையணி வந்தது.
இதனால், மோன சமாதியை அடையும் வழியும், அதனை உணர்தல் பற்றல்களின் அருமையும் கூறி முடிக்கப்பட்டது.