ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி

பதிகங்கள்

Photo

காட்டும் குறியும் கடந்தஅக் காரணம்
ஏட்டின் புறத்தில் எழுதிவைத் தென்பயன்
கூட்டும் குருநந்தி கூட்டிடி னல்லதை
யாட்டின் கழுத்தில் அதர்கிடந் தற்றே.

English Meaning:
Guru Alone Can Show the Way

He is beyond the Signs and Mudras
He is the Cause;
What avails describing Him in Books?
All those are like excrescence growth on Sheep`s neck;
— Unless the Guru himself leads you to Him.
Tamil Meaning:
காட்டு - எடுத்துக்காட்டு. குறி - ஏது. நேரே காண வாராத பொருளை அதனை விட்டு நீங்காததாய்க் காணப்படும் ஏதுவாலும், அதனோடொத்த உவமத்தாலும் கருதியுணரலாம். ``ஏதுக்களாலும் எடுத்த மொழியாலும் மிக்குச் - சோதிக்க வேண்டா``9 என்று அருளிச் செய்தபடி, முன் மந்திரத்தில் ``மறைபொருள்`` எனப் பட்ட அந்த மெய்ப்பொருளை விட்டு நீங்காது அதனை அறிவிக்கும் ஏதுவாய் நமக்குக் காணப்படுவதும் ஒன்றில்லை. இனி, தனக்குவமை யில்லாதான்``3 என்றபடி, அப்பொருளோடு ஒத்ததாய், அதற்கு உவமையாவதும் ஒன்றில்லை. அது பற்றி அப்பொருளை, ``காட்டும் குறியும் கடந்த அக்காரணம்`` என்றார். அப்பொருளே எல்லா வற்றிற்கும் முதலாய் நிற்றலின், ``காரணம்`` எனப்பட்டது. `காரணம், முதல்` என்பன ஒரு பொருட் சொற்கள். இங்ஙனம் காட்சி கருதல்கட்கு எய்தாத அப்பொருளை உணர்த்துவன உரைத்திட்சிகளேயாம். ஆயினும் அவ்வுரைப் பொருள்களை அனுபவமாகப் பயிலாது, உரைகளை ஏட்டின் புறத்திலே எழுதி வைத்தால், அதனால் என்ன பயன் விளையும்? ஒரு பயனும் விளையாது. இனி அப்பொருளை அனுபவமாகப் பற்ற அதனோடு சேர்ப்பிக்கின்றவர் சிவ குருவே. அவர் சேர்ப்பித்தால் மேற்குறித்த உரைப் பொருள்கள் எல்லாம் அனுபவமாகப் பயன்படும். இல்லாவிடில் ஏட்டில் எழுதி வைத்தன எல்லாம் ஆட்டின் கழுத்தில் மடிக் காம்புபோல்வன தூங்குகின்ற அத்தன்மையனவேயாம்.
Special Remark:
`எழுதி மட்டும் படிப்பின், தமக்கும், பிறர்க்கும் அவை யாதொரு பயநையும் செய்யா` என்பதாம். இஃதே பற்றி, ``நூலறிவு பேசி நுழைவி லாதார் திரிக``* அம்மைத் திருவந்தாதி - 33.என்னும் அனுபவ மொழியும்,
``ஒன்றும் குறியே குறியாத லால்அதனுக்கு
ஒன்றும் குறிஒன் றிலாமையினால், ஒன்றோடு
உவமிக்க லாவதுவும் தானில்லை; ஒவ்வாத்
தவமிக்கோ ரேஇதற்குச் சான்று``9
என்னும் சாத்திரத் திருமொழியும் எழுந்தன.
கு-ரை: ``காரணம்`` என்றது, காரணமாய் உள்ள இயல்பையும், அதனை அடையும் வழியையும் கூறும் உரைகளைக் குறித்தது என்னை? எழுதப்படுவன உரைகளேயாதலால், ``நந்தி`` என்றது, `சிவ குரு` என்னும் குறிப்பினது. `அவர் கூட்டினல்லது` என எடுத்துக் கொண்டுரைக்க. ``அல்லதை`` என்பது ஐயிற்றிடைக் குற்றுகரம்.
இதனால், `ஒரோ ஒருகால் பிற கல்விகள் எல்லாம் ஆசிரியன் இன்றியும் பயன்படும்; மோன சமாதியைப் பற்றிய கல்வி, ஆசிரியன் இன்றிப் பயன்படாது` என்பது வலியுறுத்தி உணர்த்தப்பட்டது. (இதன் பின் பதிப்புக்களில் காணப்படும், ``உணர்வுடையார்கட்கு உலகமும் தோன்றும்`` என்னும் மந்திரம் ஏழாம் தந்திரத்து, ``சம்பிரதாயம்`` அதிகாரத்தில் வந்தது.