ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி

பதிகங்கள்

Photo

அதுக்கென் றிருவர் அமர்ந்தசொற் கேட்டும்
பொதுக்கெனக் காமம் புலப்படு மாபோல்
சதுக்கென்று வேறு சமைந்தாரக் காணின்
மதுக்கொன்றைத் தாரான் வளந்தரும் அன்றே.

English Meaning:
Lord`s Gushing Love

When for purposeful union the lovers sit and talk
Of a sudden gushes their passion;
When the Lord of fragrant Konrai flower beholds
Those who determined sit to meet Him,
He His Grace unhesitating grants.
Tamil Meaning:
காமக் கலவிக்கு உரியராய் அமைந்த இருவர் (ஒருவனும் ஒருத்தியும்) அது பற்றித் தம்முட் குறிப்புச் சொற்களால் உரையாடுதலை எதிர்பாராத வகையில் கேள்வியளவிற் கேட்டாலும் அவரோடு ஒத்த பருவத்தினர்க்கு அடங்கியிருந்த காமக்குறிப்புச் சடக்கென அவர் உள்ளத்தில் எழுந்து அவரைத் தன் வயப்படுத்துதல் போல, மோன சமாதிக்கு உரியராய் உலகரோடு சேராது தனித் திருக்கும் ஞானியரை எதிர்பாராத வகையில் கண்ணாற் கண்டாலும் அவரோடு ஒத்த ஞானியர்க்கு, அடங்கியிருந்த மோன சமாதி அப்பொழுதே சடக்கெனமிக்கெழுந்து, அவரைத் தன்வயப் படுத்தும்.
Special Remark:
``அதுக்கு`` `அதற்கு` என்பதன் மரூஉ. பின்வரும் ``காமம்`` என்பதைச் சுட்டுகின்ற அது என்னும் சுட்டுப் பெயர், செய்யுளாகலின் முன்னர் வந்தது. `என்ற` என்பதன் ஈற்று அகரம் தொகுத்தலாயிற்று. என்ற - என்று அமைந்த. அமர்தல் - விரும்புதல். ``கேட்டும்`` என்னும் உம்மை இழிவு சிறப்பு. உவமையில் வந்த இவ் வும்மைக்கு ஏற்புடைபபொருளிலும் `காணவும்` என உம்மை விரித் துரைக்க. சதுர் - பொதுக்கு, என்பது விரைவுக் குறிப்பாய நாட்டு வழக்கு இடைச்சொல். இது, `பொசுக்கு` என்றும் வழங்கும். பெருமை அஃது இங்கு அதிகாரத்தால் மோன சமாதியைக் குறித்தது. `மதுக் கொன்றைத் தாரானது வளம்` என ஆறாவது விரிக்க. அவ்வளமாவது, அவனது ஆனந்தம். அந்த ஆனந்த நிலையே மோன சமாதியாதலை அறிக. அன்றே - அப்பொழுதே` `காணினும் அக்காட்சி வளம் தரும்` என்க.
இதனால், `மோன சமாதி எய்தினார், உலகியலின் தாக்குதலால் அஃது இழக்கப்படாமைப் பொருட்டு அதில் உறைத்து நின்றாரொடு கூடியிருக்க` என்பது கூறப்பட்டது.