ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி

பதிகங்கள்

Photo

இருளும் வெளியும் இரண்டையும் மாற்றிப்
பொருளிற் பொருளாய்ப் பொருந்தஉள் ளாகி
அருளால் அழிந்திடும் அத்தன் அடிக்கே
உருளாத கல்மனம் உற்றுநின் றேனே.

English Meaning:
Merging into Finite Reality

Darkness and Space I transcended,
As substance into Substance I merged,
To the Feet of Lord in Grace abounding,
Firm as rock immovable
My thoughts entire went.
Tamil Meaning:
`கேவலம் சகலம்` என்னும் இரு நிலைகளையும் கடந்து சுத்த நிலையை எய்தி, அதில் மேற்பொருள் மேற்பொருளே யாயும், கீழ்ப்பொருள் கீழ்ப்பொருளேயாயும் விளங்க, அந்த மேற் பொருளுக்குள்ளே அடங்கியதனால், இடையிட்ட முன் மந்திரத்திற் கூறியபடி அனைத்தும் திருவருளால், தோன்றாது மறைவதாகிய சிவனது திருவடி நிழலில், சிறிதும் நகர்ந்து அப்பாற் செல்லாத கல்போன்ற உணர்வை நான் இப்பொழுது பொருந்தி நிற்கின்றேன்.
Special Remark:
கேவல நிலையில் யாதும் தோன்றிற்றிலது. சகல நிலையில் மேற்பொருள் கீழ்ப்பொருளாயும், கீழ்ப்பொருள், மேற்பொருளாயும் மாறித்தோன்றின. அவ்விரண்டும் குற்றம் ஆகலின், `சுத்தத்தில் அவை உள்ளவாறு விளங்கின` என்பார், ``பொருளிற் பொருளாய்ப் பொருந்த உள்ளாகி என்றார். ``ஆகி`` என்றது, ஆகினமையால்` எனக் காரணப்பொருட்டாய் நின்றது. ``அத்தன் அடி`` என்பது திருவருள் வியாபகமே. ``அடிக்கு`` என்பது, ஏழாவதன் பொருளில் நான்காவது வந்த உருபு மயக்கம். ``மனம்`` என்றது உணர்வை. சிறிதும் சலியாமை பற்றி, `கல்போன்றது` என்றார். அவ்வாறு நிற்றலே உறைத்து நிற்றலாம்.
இதனால், முன் மந்திரத்திற் கூறிய சலியா நிலை உவமை முகத்தால் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.