ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி

பதிகங்கள்

Photo

நின்றார் இருந்தார் கிடந்தார் எனல்இல்லாச்
சென்றார்தம் சித்தமே மோன சமாதியாம்
மன்றேயும் அங்கே மறைபொருள் ஒன்றுண்டு
சென்றாங் கணைந்தவர் சேர்கின்ற வாறே.

English Meaning:
Through Samadhi Being Within is Reached

They stood, they sat, they lay
— Thus their state can be decribed not;
Their thought is in Samadhi`s Silence
There is a Being Hidden;
They who reach it (Samadhi),
Have reached Him indeed.
Tamil Meaning:
உலகில் பலர் மறைகின்ற காலத்தில், ``நின்றான்; இருந்தான்; கிடந்தான்; தன் கேள் அலறச் சென்றான்``8 என்னும் சொல் நிகழும்படியாக, காளையராய்ப்பின் மூத்து ஒடுங்கிப் பின் பிணியுற்று கிடந்தே மறைகின்றனர். அவ்வாறின்றி, ஊர்ப் பயணம் புறப்படுவது போல இவ்வுலகை விட்டு நல்ல உணர்வோடு மறைகின்றவர்களது உணர்வு உற்றிருந்த நிலைமையே `மோன சமாதி` எனப்படுகின்றது. அந்த நிலை பலரும் சென்று அடையத்தக்க மன்றம் போன்றதுதான். மன்றம் ஆயினும் அங்கு மறைந்து நிற்கும் பொருள். அஃதாவது, அறி -வினுள் அறிவாய் நிற்கும் பொருள் ஒன்று உண்டு. அதை அடைந்தவர் அடைந்த முறையே முறை. `பிற எல்லாம் முறையல்ல` என்பதாம்.
Special Remark:
``இல்லா`` என்பது, துவ்வீறு கெட்ட எதிர்மறை வினை யெச்சக் குறிப்பு. ``சித்தம்`` என்றது உணர்வை. அஃது ஆகுபெயராய், அதன் நிலைமையைக் குறித்தது. `அதனை அடைதற்கு எவர்க்கும் தடையில்லை` என்பது உணர்த்துதற்கு, அதனை, `மன்றுபோல்வது` என்றார். ஏயும், உவம உருபு. `ஆங்குச் சென்று அணைந்தவர்` என மாறிக் கூட்டுக. `சேர்கின்ற ஆறே ஆறு` என ஒரு சொல் வருவித்து முடிக்க. ஆறு - முறைமை.
இதனால், மோன சமாதியாவது இன்னது` என்பது உணர்த்தப்பட்டது.