ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி

பதிகங்கள்

Photo

கண்டறி வார் இல்லைக் கயத்தின் நந்தியை
எண்டிசை யோரும் `இறைவன்`என் றேத்துவர்
அண்டங் கடந்த அளவிலா ஆனந்தம்
தொண்டர் முகந்த துறைஅறி யோமே.

English Meaning:
Bliss of Devotees is Beyond Description

None have seen Him and known Him,
He, the Nandi, within the body, is;
All, in direction eight,
Praise Him as Lord;
The unending bliss of His devotees many;
Surpasses universes vast;
—How much they enjoyed Him, little do we know!

Tamil Meaning:
சிவபெருமானை அறிஞர் பலரும் `முதற் கடவுள்` என்று உணர்ந்து போற்றுகின்றனர். ஆயினும் அவன் அவரவர் உடலிற் குள்ளேயிருந்து அருள் புரிதலைப் பலர் அறிந்திலர், (புறத்திலேதான் வைத்துப் போற்றுகின்றனர் என்றபடி) ஆகவே, அதனை அறிந்த ஒரு சிலரே அவனுடைய மெய்த்தொண்டர் ஆகின்றனர். அவர்கள் உலகங்களைக் கடந்து ``கரையிலாக் கருணை மாகடலாயும்``3 அதனானே கரையிலா இன்ப மாகடலாயும் உள்ள சிவனிடத்தில் அந்த ஆனந்தத்தைத் தம்மால் ஆமளவும் முகந்து உண்கின்ற துறையை நாமெல்லாம் அறியாதவர்களாகவே இருக்கின்றோம்.
Special Remark:
``நந்தியை`` என்பது முதலாகத் தொடங்கி, `காயத்தில் கண்டறிவார் இல்லை`` என மாற்றி; அதனை இரண்டாம் அடியின் இறுதியில் கூட்டியுரைக்க.
காயம் - தூய உடம்பு. அதன் உள்ளிடமாகச் சொல்லப்படுவது இருதயம். அதனைப் பூசாத்தானமாகக் கொண்டு செய்யும் அகப் பூசையே சிறப்புடைப் பூசையாகும். இஃது `அந்தரி யாகம்` எனப்படும். ``அந்தரியா கந்தன்னை முத்தி சாதனமாய் அறைந்திடுவர்; அதுதானும் ஆன்ம சுத்தி யாகும்``l என்றது சிவஞான சித்தி. இது கிரியா பூசை.
ஞான நிலையில், `சிவரூபம், சிவதரிசனம், சிவயோகம்` என்னும் முறையில் அறிவுக்கறிவாய் அறிவினுள்ளே வைத்துச் சிவன் உணர்ந்து வழிபடப்படுவான். அது ஞான பூசை. இவை ஒன்றின் ஒன்று மேம்பட்டன. இந்த மூவகை நிலையும், `காயத்தின் உள்` என்பதாகக் கொள்ளப்படுதலின், இவற்றுட் செல்லாது புறத்தில் மட்டும் வைத்து வழிபடுவாரை நாயனார், `நந்தியைக் காயத்தின் உள்ளே கண்டறிவார் இல்லை` என்றார். காயத்தின் உள்ளே என்பதில் சாரியை நிற்க, உருபு மறைந்தது.
``எந்தையே ஈசா, உடல்இடம் கொண்டாய்;
யான்இதற் கிலன் ஒர்கைம் மாறே``*
``நிலாவாத புலால் உடம்பே புகுந்து நின்ற
கற்பகமே, யான் உன்னை விடுவே னல்லேன்``*
என்றாற்போல வரும் திருமொழிகளும் இவற்றையே குறிக்குமாற்றை ஓர்ந்துணர்ந்துகொள்க. இனி இவற்றிற்கெல்லாம் இவ்வுண்மைப் பொருளைக் கொள்ளாது, தூல உடம்பில் தரிக்கப்படும் சின்னங்களையே இவை குறிப்பனவாகக் கொண்டமை வாரும் உளர்.
``அண்டம் கடந்த பொருள்
அளவில்லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்``8
``... ... பேரா, ஒழியாப், பிரிவில்லா,
மறவா நினையா, அளவிலா,
மாளா இன்ப மாகடலே``9
என்னும் திருமொழிகளை இதன் மூன்றாம் அடியோடு ஒப்பிட்டு உணர்க. நுகரும் பகுதியை முகக்கும் துறையாக உருவகித்தவர். முழு நிலையையும் கடலாக உருவகம் செய்யாமையால் இஃது ஏகதேச உருவகம்.
இதனால், சிவனை அகத்தில் வழிபடுதலே மோன சமாதியைப் பயத்தல் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.