ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி

பதிகங்கள்

Photo

தற்பர மல்லன் சதாசிவன் றானல்லன்
நிட்கள மல்லன் சகள நிலையல்லன்
அற்புத மாகி அனுபவக் காமம்போல்
கற்பனை யின்றிக் கலந்துநின் றானே.

English Meaning:
Felicity of Union of Jiva and Siva

Tat-Para He is not,
Sadasiva He is not,
Formless is He,
Formed is He not,
Wondrous indeed like felicity of sex-union enjoyed Imagination baffling,
He in me in union stood.
Tamil Meaning:
(இம்மந்திரத்திற்கு முன் மந்திரத்திற் போந்த, ``நந்தி`` என்பதை எழுவாயாக வருவிக்க.)
சிவன், மோன சமாதியை அடைந்தவர்கட்கு, அதற்கு முன் பெல்லாம் அவர்கள் பாவித்த பாவனைகளில் தோன்றியது போலத் தோன்றாமல், அவர்களது பாவனைகளில் ஒன்றற்கும் உட்படாத வேறோர் அதிசயப் பொருளாய், அநுபவப் பொருளாய் விளங்கி நிற்கின்றான்.
Special Remark:
`சிவன் ஒருவன் உளன்` என, வேதாகமங்கல் பற்றுக் கோடாகப் பொதுவகையான் உணர்ந்த நிலையில் அவன்,
``தேவராயும், அசுர ராயும், சித்தர், செழுமறையேர்
நாவராயும், நண்ணு பாரும், விண், எரி, கால், நீரும்
மேவ ராய விரைமலரோன், செங்கண்மால் ஈசன் என்னும்
மூவ ராயும்``3
இங்ஙனம் பல திறப்பட்டுக் காணப்படுகின்ற உயிர் வகைகளையும், ஐம்பூதம் முதலிய உயிரல்பொருள் வகைகளையும் வைத்து, `சிவன் இவை அனைத்திற்கும் மேலாய் உளன்` என்று உணர்ந்த அளவில், அவன் உண்மை மாத்திரையாக நிருவிகற்பமாகவே தோன்றினான். தற்பரம் - தனக்கு மேலானது. தான் உயிர். உயிர்களாகிய அறிவுடை உலகத்தைக் கூறவே, இனம்பற்றி, உயிரல்லாத அறிவிலா உலகமும் கொள்ளப்படும். இந்த நிருவிகற்ப உணர்வும் பாவனையே யாதல் அறிக. இவ்வாறும் அவன் இப்பொழுது இல்லை.
இனி, `உளன்` எனப் பொதுவாக உணரப்பட்ட சிவன் ஏழ்வியல்பினன்? என ஆராயுமிடத்து, `அவன் தன் பொருட்டாக யாதொரு தொழிலையும் வேண்டாதவனாயினும், உயிர்களின் பொருட்டாக ஐந்தொழில்களைச் செய்கின்றான்` என ஆசிரியர், வேதாகமங்களின்வழி அறிவிக்குமிடத்து, `அவ்வைந்தொழில் - அதி சூக்குமம், சூக்குமம், தூலம் என மூவகைப்படும்` எனவும், அதி சூக்கும ஐந்தொழிலை அருவத் திருமேனியை யுடையனாயும், சூக்கும ஐந்தொழிலை அருவுருவத் திருமேனியை யுடையனாயும், தூல ஐந்தொழிலை உருவத் திரமேனியை யுடையனாயும் நின்று செய்வன்` எனவும் அறிவிக்க. அவ்வாறே அறியுமிடத்து, அத்திருமேனிகள் ஏனைப் பொருள்கள்போலக் கட்புலனாகாமையால் ஆசிரியர் அறிவித்தவாறே பாவித்து வழிபடும் வழிபாட்டுப் பொருள்களாயின. அவற்றுள் உருவம் சரியை நிலையிலும், அருவுருவம் கிரியை நிலை யிலும், அருவம் யோக நிலையிலும் வழிபடும் பொருள்களாயின. அந்தப் பாவனைப் பொருள்களாகவும் அவன் இப்பொழுது இல்லை. இங்ஙனம் இவை எல்லாம் அல்லவாம் நிலைகளையே முதல் இரண்டடிகளில் எடுத்தோதினார். சதாசிவன் - அருவுருவத் திரு மேனியன். நிட்களம் - அருவத்திருமேனி. அது, `சிவம், சத்தி` என இருவகைத்து. சகளம் - உருவத் திருமேனி. இது, `மகேசுரன், வித்தை` என இருவகைத்து.
இவையெல்லாம் ஐந்தொழில் செய்தற்பொருட்டுக் கொள்ளப் பட்ட தடத்த வடிவங்களே யாதலாலும், தடத்தம் பெத்தான்மாக்களுக்கே உரியதாக, முத்தான்மாக்களுக்கு அவையனைத்தினும் வேறாய், வாக்கு மனோதீதமாய் உள்ள சொரூப நிலையே உரித்தாகலும் மோன சமாதியை அடைந்தோராகிய முத்தர்களுக்கு சிவன் `சதாசிவன்` முதலாகச் சொல்லப்படும் நிலையினன் அல்லன் என்றார். இந்நிலையைத் திருஞான சம்பந்தரும், ``கறையணி வேலிலர் போலும்``* எனத் தொடங்கும் திருப்பதிகம் முழுவதிலும் பலவாக விரித்தருளிச் செய்தார்.
தடத்த மெல்லாம் பாவனை யளவினவாய் நிற்றலாலும், சொரூபம் எவ்வகையும் பாவிக்க வாராது பாவனையால் கண்டு வந்த அவற்றினும் வேறாய் அநுபவத்தில் உணரப்படுவது ஆகலானும், ``அற்புதமாய்க் கற்பனையின்றி, அனுபோகக் காமம்போல் கலந்து நின்றான்`` என்றார்.
காம இன்பமும், `கற்பனை இன்பமும், அனுபவ இன்பமும்` என இருவகைத்து. காதலனும், காதலியும் மெய்யுறு புணர்ச்சியின்றி, உள்ளப் புணர்ச்சி மட்டுமே வாய்த்த நிலையில் அவர்களது உள்ளத்தில் தோன்றுகின்ற இன்பம் கற்பனை இன்பம். மெய்யுறு புணர்ச்சி வாய்த்த காலத்தில் அவர்கள் அடையும் இன்பம் அனுபவ இன்பம். `அவ்வாறே குரு உபதேசத்தைக் கேட்டல், சிந்தித்தல், தெளிதல்களால் விளையும் சிவானந்தம் கற்பனை ஆனந்தமாக, நிட்டையாகிய மோன சமாதியில் விளையும் சிவானந்தமே அனுபவ ஆனந்தமாய்` என்றற்கு, ``கற்பனையின்றி அனுபவக் காமம்போல் கலந்து நின்றான்`` என்றார். ``மருவி யிருவரும் புணர வந்த இன்பம் வாயினாற் பேசரிது; மணந்தவர்தாம் உணர்வர்;* என்றது போல இதுவே மோன சமாதி அனுபூதி என்க. இதனுள் இரண்டாம் அடி இன எதுகை பெற்றது.
இதனால், சொரூப அனுபவமே மோன சமாதியாதல் கூறப்பட்டது.