ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி

பதிகங்கள்

Photo

கண்டார்க் கழகிது காஞ்சிரத் தின்பழம்
தின்றார்க் கறியலாம் அப்பழத் தின்சுவை
பெண்டான் நிரம்பி மடவிய ளானால்
கொண்டான் அறிவன் குணம்பல தானே.

English Meaning:
Deceptive Ways of World

Lovely to look at is the fruit of nux-vomica,
Only those who eat know its taste (bitter)
When virgin matures and full woman becomes,
Only then will husband know her qualities diverse.
Tamil Meaning:
எட்டி மரத்தின் பழம் பார்ப்பவர்கண்கட்கு மிக அழகிதாய்த் தோன்றும். ஆயினும் அதனைத் தின்றாலோ, சுவை கைப்பாதலுடன், தின்றவரையும் கொல்லும் தன்மையுடையது. (அதனால், அறிவுடையோர் ஒருபோதும் அப்பழத்தைத் தின்னார்.)
இனிப் பெண்ணொருத்தி பெண்மை நிரம்பி, `பெண்டு` என்பதற்குத் தகுதியடைந்த பின்பே அவளைக் கொண்டவன் அவளோடு தனிமையிற் பழகி, அவளுடைய குணங்கள் பல வற்றையும் உள்ளவாறு உணர்ந்து அவளது குணங்கட்கு ஏற்ப ஒழுகி இன்புறுத்துவான். (அவள் பெண்மை நிரம்பாதபொழுது கொண்டவன் அவ்வாறு செய்யான்.)
Special Remark:
மோன சமாதி அல்லாதவற்றை மோன சமாதியாகச் சொல்லிச் சொற்சாலம் செய்யும் நூல்களும், உரைகளும் உள. ஆயினும் அவற்றின்வழி நின்றோர் அவற்றால் ஏமாற்றமே எய்தி, வாழ்நாள் வீணாளாயினமை அறிந்து இரங்குவர்.
``இருபிறப்பும் வெறுவியராய் இருந்தார் சொற்கேட்டு
ஏழையேன் நான்பண் டிகழ்ந்த வாறே``*
என்னும் அப்பர் திருமொழியே இதற்குப் போதிய சான்று.
சிவன் எல்லா உயிர்கட்கும் உய்யும் நெறி காட்டி உய்விப்பவனே யாயினும் பக்குவம் எய்திய உயிர்கட்கே அவன் முன் வந்து அதனைச் செய்வான். (பக்குவம் எய்தாத உயிர்கட்கு அவன் அதனைச் செய்யான்.)
இவ்விரு பொருள்களையே இம்மந்திரம் முன், பின் இரு பகுதிகளாலும் உணர்த்தி நிற்றலின், இது பிறிதுமொழிதல் அணியைப் பெற்றதாம்.
பேதை, பெதுமைப் பருவத்திலேயும் மகளிரை மணம் செய்து கொடுத்தல் அக்காலத்து வழக்காதலைப் பற்றி இதன் பிற்பகுதியிற் போந்த உவமை வந்தது. `மடவியள் ஆனாலே` என்னும் பிரிநிலை ஏகாரம் தொகுத்தலாயிற்று. அறிதல், அறிந்து ஒழுகுதலாகிய தன் காரியம் தோன்ற நின்றது. இதன் இரண்டாம் அடி இன எதுகை பெற்றது.
இதனால், சற்குரவன் கிடையாமை பற்றிப் பொறுமையிழந்து, அசற்குரவரை அடைந்து அல்லல் உறல் கூடாது` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.
``இரைதேர் கொக்கொத்து இரவு பகல்
ஏசற் றிருந்தே வேசற்றேன்``
எனவும்,
``நல்கா தொழியான் நமக்கென்று உன்
நாமம் பரவி, நயனம் நீர்
மல்கா, வாழ்த்தா, வாய் குழறா,
வணங்கா, மனத்தால் நினைந் துருகிப்
பல்கால் உன்னைப் பாவித்துப் பரவி``*
எனவும் அருளிச் செய்தவாறு `அடங்கியிருத்தல் வேண்டும்` என்பதாம்.