ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 25. மோன சமாதி

பதிகங்கள்

Photo

துரியங்கள் மூன்றும் கடந்தொளிர் சோதி
அரிய துரியம் அதன்மீது மூன்றாய்
விரிவு குவிவு விழுங்கி உமிழ்ந்தே
உரைஇல் அனுபூ திகத்தில்உள் ளானே.

English Meaning:
Lord is Beyond Turiyatita

He is the Light Transcendental
That shines beyond Turiya Three,
In the Turiyatia that transcends them,
Beyond waking, dreaming sushupti states;
In that state; defying thought and speech.
Tamil Meaning:
சிவன், `கேவல துரியம், சகல துரியம், யோக துரியம்` என்னும் இம்மூன்று துரியங்களையும் கடந்து நிற்கும் ஒளியாய் உள்ளவர். (இத்துரியங்கள் முன் தந்திரத்தில் விளக்கப் பட்டன. இம்மூன்றையும் கடந்தது அரிய துரியம். அது நின்மல துரியம். (இதுவும் முன் தந்திரத்தில் விளக்கப்பட்டது.) அதன்கண் உள்ள மூன்றாவன, ஞாதிரு, ஞானம், ஞேயம் (அறிபவன் அறிவு, அறியப்படும் பொருள்.) `இவை தோன்றி நிற்றல் விரிவு` எனவும், தோன்றாது மறைதல் குவிவு` எனவும் உணர்க. துரிய நிலையில் விரிவும், அதனையும் கடந்த அதீத நிலையில் குவிவும் உண்டாகும். ஆகவே, `விரிவை விழுங்கிக் குவிவை உமிழ்ந்தது` என நிரல் நிறையாகக் கொள்க. குவிந்த நிலையே பேசா அனுபூதி, அல்லது, மோன சமாதி ஆதலின், ``உரைஇல் அனுபூதிகத்து உள்ளான்`` என்றார். `சோதி, விழுங்கி, உமிழ்ந்து உள்ளான்` என முடிக்க. ``மீது`` என்பது ஏழன் உருபாயும், `மேல்` என்னும் பொருட்டாயும் நின்றது. ``ஆய்`` என்னும் வினையெச்சம், ``விரிவு`` என்னும் தொழிற்பெயர் கொண்டது.
Special Remark:
இதனால், மோன சமாதி முத்துரியங்களையும் கடந்த அதீத நிலையாதல் வலியுறுத்தி உணர்த்தப்பட்டது.