ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

பதிகங்கள்

Photo

வழிசென்ற மாதவம் வைக்கின்ற போது
பழிசெல்லும் வல்வினைப் பற்றறுத் தாங்கே
அழிசெல்லும் வல்வினை ஆர்திறம் விட்டிட்
டுழிசெல்லில் உம்பர் தலைவன் முன்ஆமே.

English Meaning:
True Path Leads Straight to Lord`s Presence

Walking in the True Path
Your holiness consummates;
The host of thine Karmaic deeds scatters
And they flee away;
Leave you the tortuous path
Of the Karmaic ridden men of world
Onward you journey, straight inside;
Thou shall, for certain, stand
In the Presence of the Lord of Heavenly Beings.
Tamil Meaning:
``வையத்தின் கண் வழி நடக்கும் பரிசு ஒன்று உண்டு`` என மேற்கூறப்பட்ட வழியிலே சென்றதாகிய பெரிய தவம் தனது பயனைக் கொடுக்கின்ற காலத்தில் மக்கள் தங்கட்குப் பழிவரக் கூடியதான வலிய வினைக்கட்டினை அறுத்தொழித்து, அது காரணமாக, முன்பெல்லாம் அழிவு வழியில் சென்று கொண்டிருந்த அச்செயலில் பொருந்துதலாகிய தன்மையை விடுத்து நல்ல இடத்தை அடைவர். அங்ஙனம் அடைந்தால், தேவர் பிரானாகிய சிவன் வெளிநின்று அருள் புரிவான்.
Special Remark:
`வைக்கின்ற` என்பதற்குச் செயப்படுபொருள் வருவிக்கப்பட்டது. `வாய்க்கின்ற` எனப்பாடம் ஓதலுமாம். பழி, அறிவுடையோர் பழித்துச் சொல்லும் சொல். ``அழி`` என்னும் முதனிலைத் தொழிற் பெயர் அதனைத்தரும் வழியை உணர்த்திற்று. `அழிவில் செல்லும் அவ்வினை` என்க. ஆர்தல் - பொருந்துதல். ``உழி`` என வாளா கூறினமையின், சிறந்த இடமாயிற்று. அது, ஞானமாகிய நிலம் என்க. ``செல்லில் என்ற அனுவாதத்தால், `செல்லுவர்` என்பதும் பெறப்பட்டது.
இதனால், தவம் உடையார்க்கே புறச்சமய மயக்கம் நீங்கிப் பயன் உண்டாதல் கூறப்பட்டது. தவமாவது, மேற் கூறிய சரியை முதலிய மூன்றுமே யாதலை நினைக. இங்கு, ``மாதவம்`` என்றதும் அதனைக் குறித்தற் பொருட்டேயாம்.