ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

பதிகங்கள்

Photo

கத்துங் கழுதைகள் போலுங் கலதிகள்
சுத்த சிவன்எங்கும் தோய்வற்று நிற்கின்றான்
குற்றந் தெரியார் குணங்கொண்டு கோதாட்டார்
பித்தேறி நாளும் பிறந்திறப் பார்களே.

English Meaning:
Contending Faiths Do Not Help

The contending Paths are like the braying asses;
The Pure Siva is all-pervasive;
They seek Him not by the right Path,
And so are not free from Impurities;
They shall grow insane
Forever entangled in the whirl of birth and death.
Tamil Meaning:
தம் குரல் பிற உயிர்கட் கெல்லாம் கடியனவாய் வெறுக்கப்படுதலை அறியாது உவகையால் உரத்துக் கத்துகின்ற கழுதைகள்போலப் பாழ்நெறி நூல்களை உரத்து ஓதுகின்ற கன்மிகள், தம் குற்றத்தை உணர மாட்டார்கள். தூயனவாகிய சிவன் எல்லாப் பொருளிலும் நிறைந்து நின்றும், ஒன்றிலும் தோய்வின்றி நிற்கின்ற சிறப்பை அறிவு நூல்களைக் கற்கும் முகத்தால் உணர்ந்து பாராட்ட மாட்டார்கள். மற்று, மயக்கம் மிகுந்து, வீணே பிறந்தும், இறந்தும் உழல்வார்கள்.
Special Remark:
``கத்தும்`` என உடம்பொடு புணர்த்ததனால் பயனில் லாத நூல்களாம். உவமை அதுபற்றியதாகலின் உவமிக்கப்பட்டார் பயனில்லாத நூல்களை ஓதுபவராயினர். பாராட்டிக் கற்கின்றவர் களைக் குறித்து.
``அலகுசால் கற்பின் அறிவுநூல் கல்லா
துலகநூல் ஓதுவ தெல்லாம் - கலகல
கூஉந் துணையல்லால் கொண்டு தடுமாற்றம்
போஉந் துணையறிவா ரில்``
(நாலடி)
என்றார் பிறரும். கலதி - முகடி; ``கலதிகள்`` என்றது, `நல்வினை யில்லார்` என்றதாம். ``சுத்த சிவன்`` என்றது, `பிறவற்றிற் கலந்தும் அந் நிலை கெடான்` என்றற்கு `தோய்வுற்று` என்பது பாடமன்று. ``குற்றந் தெரியார்`` என்பதை முதலடியின் இறுதியிற் கூட்டி யுரைக்க. `குற்றந் தெரியார்`` என்பது பாடமாயின், அஞ்ஞானமாகிய குற்றம் நீங்கப் பெறார்; அதனால், குணங்கொண்டு கோதாட்டார்` என்க. `அக்குணங் கொண்டு` எனச் சுட்டு வருவித்து உரைக்க. கோதாட்டல் - பாராட்டல்.
``குற்றங்கள் நீக்கிக் குணங்கொண்டு கோதாட்டி`` 1
என்று அருளிச் செய்தார் வாதவூரடிகளும். மூன்றாம் அடி இன வெதுகை பெற்றது.
இதனால், பிற சமயங்களின் நிற்பாரது கல்வியின் இழிவு கூறப்பட்டது.