ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

பதிகங்கள்

Photo

அந்நெறி நாடி அமரர் முனிவரும்
சென்னெறி கண்டார் சிவனெனப் பெற்றார் பின்
முன்னெறி நாடி முதல்வன் அருளிலார்
செந்நெறி செல்லார் திகைக்கின்ற வாறே.

English Meaning:
True and False Faiths

That Path they took
The immortal Devas and the saintly tapasvins;
And so reached the Goal True
And merged in one with Siva;
But they that followed froward faiths
Received not His grace;
They lost their way,
And forever wander.
Tamil Meaning:
தேவர்களும், முனிவர்களும் `சிறப்புடைய நெறி யாது` என ஆராய்ந்து உணர்ந்து சென்ற நெறியையே நேரிய நெறியாகக் கொண்டு ஒழுகி, அதனால், சிவனேயாய் நின்ற பேற்றினைப் பெற்றார் சத்திநிபாதர். மற்றுச் சத்திநிபாதம் இல்லாதவர் தம் மனம் சென்ற நெறியையே நேரிய நெறியாக்கொண்டு முற்கூறிய நேரிய நெறியிற் செல்லமாட்டாது, பிறவிக் கடலுட் கிடந்து கலங்கு கின்றது இரங்கத்தக்கது.
Special Remark:
`இரங்கத்தக்கது` என்பது சொல்லெச்சம். அம்நெறி - அழகியநெறி. ``முதல்வன் அருள்`` என்றது சத்திநிபாதத்தை, பின்னதில். ``அருளிலார்`` என்பதனால், முன்னதில் ``அஃது உடையார்`` என்பது பெறப்பட்டது. முன்நெறி வினைத்தொகை.
இதனால், புறச்சமயங்கள் சத்திநிபாதம் வாயாத உலகர்க்கே உரியனவாய்ப் பிறவிக் கடலைக் கடப்பியாமை கூறப்பட்டது.