ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

பதிகங்கள்

Photo

நூறு சமயம் உளவாம் நுவலுங்கால்
ஆறு சமயம்அவ் ஆறுட் படுவன
கூறு சமயங்கள் கொண்ட நெறிநில்லா
ஈறு பரநெறி இல்லா நெறியன்றே.

English Meaning:
The False Paths Lead not to Param

Forsooth,
The Faiths here below are a hundred in number,
In that swollen stream are the Six Faiths too;
These Faiths take not to the goal they boast of;
They are true Faiths never,
They take you not to Path of Param.
Tamil Meaning:
சமயங்களைப் பற்றிச் சொல்லுமிடத்துச் சிறி யனவும், பெரியனவும் ஆகிய பல வேறுபாடுகளால் சமயங்கள் மிகப் பலவாய் உள்ளன. `அகம், புறம்` என்பவற்றுள் `ஆறு` என ஒருவாறு வரையறுத்துக் கூறப்படும் சமயங்கள் மேற்கூறிய பலவற்றுள்ளே உள் ளனவாம். அங்ஙனம் சொல்லப்படும் சமயங்கள் பலவும் `உண்மை` எனக் கொண்ட நெறிகளிலே மக்கள் நின்று இறுதியாக அடையும் மேலான் நெறி, மேற் கூறிய அவற்றுள் ஒன்றிலும் இல்லாத நெறியாம்.
Special Remark:
`அந்நெறி சித்தாந்த சைவமாம்` என்பதே நாயனாரது திருவுள்ளமாதலும், அந்நெறி பிற சமயங்களில் இல்லாமையும் இத் தந்திரத்தின் தொடக்கத்திலே அருளிப் போந்த மந்திரங்களான் அறிக. ``நூறு`` என்றது, `மிகப் பல` என்றவாறு. ``ஆறு`` எனப் பொதுப்பட அருளிச் செய்ததனால், அகம், புறம் இரண்டும் கொள்ளப்படுவ ஆயின. பின் வந்த ஆறு, நெறி. `ஆற்றுள்`, `ஈற்று` என்னும் ஒற்றுக்கள் தொகுத்தல் பெற்றன. நில்லா - நின்று. `அவற்றுள் இல்லா நெறி` என்க.
இதனால், `சித்தாந்த சைவத்துக்கு நிகராகாமை பற்றி இங்கு இகழ்ந்து கூறினும், பிற சமயங்கள் அதற்குப் படிகளாய் உள்ளன` எனக் கூறி, ஐயம் அறுக்கப்பட்டது.