ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

பதிகங்கள்

Photo

சிவமல்ல தில்லை இறையே சிவமாம்
தவமல்ல தில்லை தலைப்படு வார்க்கிங்
கவமல்ல தில்லை அறுசம யங்கள்
தவமல்ல நந்திதாள் சார்ந்துய்யும் நீரே.

English Meaning:
God Can Be Reached Only by Devotion

Proclaim you this:
There is nothing except Siva
No tapas except it be for Him,
The Six Faiths are nothing but a dreary waste;
Do seek Nandi of mighty penance;
You shall indeed be redeemed truly.
Tamil Meaning:
சிவம் அல்லது வேறு பதிப்பொருளும், சிவமாம் பயனைத் தருகின்ற தவம் அல்லது வேறு தவமும் இல்லை. ஆறாகக் கூறப்படுகின்ற புறச்சமயங்கள் தம்மை அடைந்தவர்க்கு இவ்வுலகில் வீண் முயற்சியாவதன்றி வேறு இல்லை. அதனால், அவை தவமாதல் இல்லை. ஆகையால் மெய்ப்பொருளை அடைய விரும்புகின்ற வர்களே, நீங்கள் சிவபெருமானது திருவடியைச் சார்ந்து பிழை மின்கள்.
Special Remark:
`சிவம் அல்லதில்லை அறையே` என்பது பாடமாயின், `சிவம்` என்பதன்றிப் `பொருள் பொதிந்த சொல் வேறில்லை` என உரைத்து, `சிவமன்றி வேறு மெய்ப்பொருள் இல்லை` என்பது அதனாற் போந்த பொருளாகக் கொள்க. ``சிவமாந் தவம்`` என்பதில், பெயரெச்சம், `நோய் தீரும் மருந்து` என்பது போலத் `தவமல்லது இல்லை தவம்` என ஒருசொல் வருவிக்க, ``அவம்`` என்பதன்பின், `ஆதல்` என்பது எஞ்சிநின்ற கருவிப் பெயர் கொண்டது. `அவை தவமல்ல` என எழுவாய் வருவித்துக்கொள்க. ``நீர்`` என்றது உண்மையைத் தலைப்பட விரும்பினோரையாதலின், அவரே விளிக்கப்படுவாராயினர். ``சிவத்தைப் பேணின் தவத்திற் கழகு`` 1 என்றார் ஔவையாரும்.
இதனால், புறச் சமயம் வேறு முயற்சியைப் பயத்தலல்லது` பயன் தாராமை கூறப்பட்டது.