ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

பதிகங்கள்

Photo

வழியிரண் டுக்கும்ஓர் வித்தது வான
வழியது பார்மிசை வாழ்தல் உறுதல்
சுழியறி வாளன்றன் சொல்வழி முன்னின்
றழிவறி வார்நெறி நாடகில் லாரே.

English Meaning:
The End of Seeking

To be born and to live again and again here below,
Verily is the curse of all;
It is the seed of Karma twain;
If you but listen to Him that knows
The origin of swirl that is birth and death,
No more shall you seek
The ways of the perishing men.
Tamil Meaning:
`பிறப்பு, வீடு` என்னும் இருவழிகட்கும் வித்தாய் உள்ளது, நிலவுலகில் வாழ்தலாகிய ஒரே வழியாம். அதனால், இவ்வுலகில் வாழ்பவர் யாவராலும் அடையப்படுவது, பிறவிச் சூழலின் நிலையை அறிந்து, அதனை அகற்ற வல்ல ஆசிரியனது உப தேசமாகிய வழியே. ஆயினும், அத்தகைய ஆசிரியன் உளனாதலைக் கண்டு வைத்தும், தாம் கெடும் நெறியை அறிந்து அந்நெறியிலே செல்வோர் அவ்வாசிரியன் அறிவுறுத்தும் நெறியைப் பெற விரும்புதல் இலர்.
Special Remark:
``உறுதல்`` என்றது, அதன் செயப்படுபொருள் மேல் நின்ற ஆகுபெயர். ``சுழி`` என்பதற்கு, `தலைப்பொறி` என உரைப்பினும் ஆம். `சொல்லாகிய வழி` என்க. `முன்னின்றும்` என்னும் சிறப்பும்மை தொகுத்தலாயிற்று. `அந்நெறி` எனச் சுட்டு வருவித்து உரைக்க.
இதனால், புறச் சமயிகள் நல்லாசிரியரை யடுத்து நன் னெறியை உணர அறியாமை கூறப்பட்டது.