ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

பதிகங்கள்

Photo

சேயன் அணியன் பிணிஇலன் பேர்நந்தி
தூயன் துளக்கற நோக்கவல் லார்கட்கு
மாயன் மயக்கிய மானுட ராம்அவர்
காயம் விளைக்கும் கருத்தறி யார்களே.

English Meaning:
God is Distant and Near

He is far away,
He is near at hand
He is rid of ailments,
He is of immortal name Nandi;
Transparent to those that have unwavering vision;
Elusive to those who are tossed in doubt;
Such know not the mysterious purpose
For which the fleshy body is fashioned.
Tamil Meaning:
சேயர்க்குச் சேயனாயும், அணியர்க்கு அணிய னாயும் நின்று, ஒன்றிலும் தொடக்குண்ணாதிருக்கின்ற அவனதுபெயர் `நந்தி` என்பதாகும். அவன்தன்னை அலைவின்றி ஒரு பெற்றியே நோக்கி நிற்பார்க்குத் தெளிவைத் தருபவனாயும், அங்ஙனம் நோக்கா தார்க்கு மயக்கத்தைத் தருபவனாயும் இருக்கின்றான். அவனது மாயத்தால் மயங்கிய மக்களாகிய புறச்சமயிகள் தமக்குக் கிடைத்துள்ள மக்கள் உடம்பு தரும் பயனை அறியும் அறிவிலராய் அப்பயனை இழப்பர்.
Special Remark:
`சேயன் அணியன் ஆகிய பிணியிலனது பேர் நந்தி` என்க. பிணி - பிணிப்பு; முதனிலைத் தொழிற்பெயர். சேயன் முதலிய மூன்றும் எதிர்மறை வினைக்குறிப்புப் பெயர். பின்னர், ``மாயன்`` என்றலின், ``தூயன்`` என்பது அதன் மறுதலையை உணர்த்திற்று. மாயன் - மாயத்தை - மயக்கத்தை - செய்பவன். `துளக்கற நோக்கு வார்க்குத் தூயன்` எனவே. மாயனாதல், அங்ஙனம் நோக்காதார்க் காயிற்று. ஐந்தொழிலில் அருளலையே `தெளிவித்தல்` எனவும், மறைத்தலையே `மயக்குதல்` எனவும் கூறினார். இவை இரண்டும் அவரவரது பக்குவம் பற்றியாம். அதனால், பக்குவம் இல்லாதார் புறச் சமயங்களையே `மெய்ச்சமயம்` என மயங்கி, மக்கட் பிறப்பின் பயனை எய்தா தொழிவர் என்பதாம்.
``பரசம யங்கட் கெல்லாப் பாக்கியம் பண்ணொ ணாதே`` 1
என்ற சிவஞான சித்தியையும் நோக்குக.
இதனால், புறச் சமயங்களின் நீங்குதல் பக்குவம் இல்லா தார்க்குக் கூடாமை கூறப்பட்டது.