ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

பதிகங்கள்

Photo

ஆயத்துள்நின்ற அருசம யங்களும்
காயத்துள் நின்ற கடவுளைக் காண்கில
மாயக் குழியில் விழுவ மனைமக்கட்
பாசத்துள் உற்றுப் பதைக்கின்ற வாறே.

English Meaning:
The Six Faiths Avail Not

The Six faiths severally congregate,
Yet, not one knows the God within;
Deep into the pit of illusion, their adherents drop,
And fastened hard by familialities of bondage,
They shake and tremble, in vain impotence.
Tamil Meaning:
முதுநூல்களின் கூற்றை அறவே புறக்கணித்து, முழுதும் தம் அறிவைக் கொண்டே ஆராய்தலாகிய அத்தொழிலில் நிற்கின்ற புறச்சமயங்கள் புறப்பொருள்களை எவ்வளவு ஆராய்ந் துணரினும், அவ்வாராய்ச்சி அறிவினுள்தானே உள்ள கடவுளைக் காணமாட்டாதனவாகின்றன. அதனால், அவை பொய்ம்மையாகிய குழியில் வீழ்ந்து கெடுவன ஆகின்றன. ஆகையால், அவையெல்லாம் மனைவி மக்கள் முதலாகிய தளையில் அகப்பட்டுத் துன்புறுதற்கான வழிகளேயாகும்.
Special Remark:
`அறுசமயத்தவர் காண்கிலர், விழுவர்` என்பனவும் பாடம். `அதனுள்` என்பதில் அன்சாரியை தொகுத்தல் பெற்றது, அறிவுள் நிற்பவனை ஒற்றுமைபற்றி உடலுள் நிற்பவனாக ஓதினார். முன்னும், பின்னும் பல இடங்களில் இவ்வாறே ஓதுதல் காண்க. மாயம் - பொய்; இங்கு மயக்கத்தைக் குறித்தது. ``பதைக்கின்ற ஆறே`` என்னும் பயனிலைக்கு, `அவை` என்னும் எழுவாய் வருவித்துக் கொள்க.
இதனுள் `ஆய்தல்` என்பது `சிவனே முதற்கடவுள்` என்னும் சைவத்தின் துணிபை முற்றாகவும், ஒருவாறாகவும் மறுத்துக் கூறுதலை ஆதலின், அச்செயலையுடையன மேற்கூறிய மதங்களேயாதல் அறிக. ஈற்றடியில் சகரமும் போலிவகையால் இன எதுகையாம். அன்றி, `உயிரெதுகை பெற்றது எனினும் அமையும்`.
இதனால், புறச் சமயங்கள் சிவனது முதன்மையைச் சிறிதும் உணராதனவும், முற்ற உணராதனவுமாய்க் கேடுபயத்தல் கூறப்பட்டது.