ஓம் நமசிவாய

ஐந்தாம் தந்திரம் - 17. புறச்சமய தூடணம்

பதிகங்கள்

Photo

உள்ளத்து ளேதான் உகந்தெங்கும் நின்றவன்
வள்ளற் றலைவன் மலருறை மாதவன்
பொள்ளற் குரம்பைப் புகுந்து புறப்படும்
கள்ளத் தலைவன் கருத்தறி யார்களே.

English Meaning:
Formal Faiths Know not God Within

He hides in you heart
Yet does Her pervade all;
He is the Munificient One;
The Lord Supreme;
Of austere penance
He is seated on the lotus of our hearts;
The cunning Master-Thief
In stealth enters this hollow abode of human flesh
And then leaves it;
None knows His deep design.
Tamil Meaning:
உயிர்க்கு உயிராய் அவற்றின் அறிவில் பொருந்தி யிருத்தலை விரும்பி, அண்டத்தில் உலகெங்கும் நிறைந்தும், பிண்டத்தில் உள்ளக்கமலத்தில் தியானப்பொருளாய் விளங்கியும் நிற்பவனும், அருள் வள்ளலும், அனைத்துலகிற்கும் தலைவனும், பொள்ளல் நிறைந்த உடலில் உயிர்ப்பாய், உட்புகுதல் வெளிவருதல் களைச் செய்தும் உயிர்களால் அறியப்படாது மறைந்து நிற்பவனும் ஆகிய முதற்பெருங்கடவுளாம் சிவபெருமானைப் புறச் சமயிகள் தங்கள் கருத்தில் கொள்ளமாட்டாதவர்களாகின்றனர்.
Special Remark:
`இஃது அவர் வினை யிருந்தவாறு` என்பது குறிப் பெச்சம். `எங்கும் நிற்றல் முதலிய பலவற்றிற்கும் உயிர்கள்மீது வைத்த கருணையே காரணம்` என்றற்கு, உள்ளத்துள்ளே நிற்றலை விரும் பினமையை முதற்கண் தனிப்பட எடுத்து ஓதினார். ``உள்ளம்`` என்பது அறிவைக் குறித்தது என்னை? ``மலர்`` எனப் பின்னர் இதயத்தைக் குறித்தலின். ``தவம்`` என்றது தியானத்தை. தவன் - தவத்தால் அடையப்படுபவன். புகுதல் புறப்படுதல்களைக் கூறினமையின், அஃது உயிர்ப்பாதல் விளங்கிற்று.
``என்னு ளேஉயிர்ப் பாய்ப்புறம் போந்துபுக்
கென்னு ளேநிற்கும் இன்னம்ப ரீசனே`` 1
என்று அருளினமையும் இங்கு நோக்கத்தக்கது. இறைவன் உயிர்களின் உயிர்ப்பாய் நிற்றல். அவை உடலொடு நிலைத்து நின்று, அந்தக் கரணங்களின்வழி வினைகளை நுகர்ந்தும், ஈட்டியும் வருதற் பொருட்டாம். உயிர்ப்பு இதயத்துடிப்பின் வழித்தாதலையும், இறைவன் இதய வெளியில் ஆடுபவனாகக் கூறப்படுதலையும் இங்கு நினைக்க. இங்ஙனம் உயிர்ப்பாய் உள்ளவனை அறியமாட்டாதவர் தங்களை அறிவராக (ஞானியராக)ச் சொல்லிக்கொள்ளுதல் நகை விளைப்பது என்பதாம். `தலைவனை` என்னும் இரண்டனுருபு தொகுத்தல் பெற்றது.
இதனால், புறச்சமயிகள் உண்மை ஏதுக்கள் பல இருப்பவும் அவற்றைக்கொண்டு உண்மையைக் கருதியேனும் உணர மாட்டாதவ ராயிருத்தல் கூறப்பட்டது.