ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

பரசு பதியென்று பார்முழு தெல்லாம்
பரசிவன் ஆணை நடக்கும்மப் பாதியால்
பெரிய பதிசெய்துபின்ஆம் அடியார்க்(கு)
உரிய பதியும்பார் ஆக்கிநின் றானே.

English Meaning:
His Love for Sakti and His Devotees

Praise Him as your Pati (Lord)
In all Worlds Parasiva`s writ runns;
His one half to the Great Grace lends;
The other half to His devotees gave
For their goal to reach;
He who this world fashioned.
Tamil Meaning:
வேதாகமங்களால், `பதி` என்று போற்றப்படுகின்ற பரமசிவனது திருவாணை எவ்வுலகிலும் தடையின்றிச் செல்லும். அதில் ஒரு கூற்றினால் முன்னுள்ள அடியார்களை அவன் தானாகச் செய்து, மற்றொரு கூற்றினால் பின்னுள்ள அடியார்களுக்காகப் பலவகையான உலகங்களைப் படைத்து வைத்துள்ளான்.
Special Remark:
பரசுதல் - துதித்தல். அதற்கு வினைமுதல் வருவிக்கப் பட்டது. `பதியென்று பரசு பரசிவன் ஆணை பார்முழுதெல்லாம் நடக்கும்` என இயைக்க. `பாதி` என்றது கூறு` என்னும் பொருட்டாய் நின்றது. ஆணை - சத்தி. அதன் ஒரு கூறு` திரோதான சத்தியாய் நின்று உலகைச் செயற்படுத்தும் மற்றொரு கூறு அருட் சத்தியாய் நின்று உயிர்களைச் சிவத்தோடு சேர்த்துச் சிவமாக்கும். இதனையே இம் மந்திரத்தாற் கூறினார். இரண்டையும் புடைபடவைத்துக் கூறியது இவ் விடத்திலேயாகும். எண்ணுப் பெயர்கள் இரட்டிக்குமிடத்து, ஒவ் வொன்று. இவ்விரண்டு, மும்மூன்று என்பன முதலாக வருதல் போல, ``பாதி பாதி`` என்பது ``பப்பாதி`` என வந்தது. அதனுள் ஒவ்வொன்று, `பதி செய்தல், பார் ஆக்கல்` என்பவற்றோடு வேறு வேறு சென்றியைந்தது. பின் ஆம் அடியார் - பின்பு தான் ஆதற்கு உரிய அடியார். எனவே, `முன் ஆம் அடியார்` என்பது தானே பெறப்பட்டது. பின் வந்த `பதி, வாழும் இடம். `பதியாகிய பாரினை ஆக்கியும் நின்றான்` என உம்மையை மாற்றியுரைக்க.
இதனால், `ஞானகுரு, பர சிவனால் பதியாக்கப்பட்டவர்` என்பது கூறப்பட்டது.