ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

தலைப்பட லாம்எங்கள் தத்துவன் றன்னை
அலைப்படு பாசம் அறுத்தறுத் திட்டு
நிலைப்பட நாடி நினைப்பற உள்கின்
தலைப்பட லாகும் தருமமுந் தானே.

English Meaning:
Lord can be Reached by Earnest Seeking

Reach you may
Our Holy One that is Truth Perfect;
Sunder Pasas strong and away cast them;
Seek Him firm and think constant within;
Reached then shall be
The Holy One that is Dharma.
Tamil Meaning:
எங்களது மெய்ப்பொருளாகிய சிவனைப் பலரும் அடையலாம். ஆயினும், அதன்பின்பும் அலைகள் போல வந்து வந்து தாக்குகின்ற பாசங்களை அவ்வப்பொழுது அவை தாக்காதபடி அறுத்தறுத்துப் போக்கி, அடைந்த அடைவு நிலைப்பில் நிற்கமாற்றை ஆராய்ந்து, தற்போதம் தலையெடாதபடி குறிக்கொண்டிருந்தால், அடைந்தது அடைந்ததாகவேயிருக்கும். அதுவே சிவனை அடைந்தவர்க்குரிய தருமமும் ஆகும்.
Special Remark:
`அவ்வாறு செய்து நிலைத்திருத்தல் அரிது` என்பதாம். இது பற்றியே ஞானம் பெற்றோர் தம் ஞானாசிரியரது அடி நிழலைப் பிரியாது உறைவர் என்க. அதிதீவிர நிலையை உடையவர்க்கு இவ்வாறான இடர்ப்பாடு தோன்றாது. ஏனையோர்க்கு இவை தோன்றும். அதனையே அருணந்தி தேவர்
``நேசமொடும் திருவடிக்கீழ் நீங்காதே தூங்கும்
நிலையுடையோர் நின்றிடுவார் நிலையதுவே ஆகி;
ஆசையுடன் அங்கும் இங்கும் ஆகி அலமருவோர்
அரும்பாசம் அறுக்கும்வகை அருளின்வழி உரைப்பாம்.3
என்றார். மெய்ப்பொருளைத் தலைப்பட்டும் அதிலே நிற்கமாட்டாது மீளப்பிறவியிற் செல்வோரைக் கருதியே திருவள்ளுவர், ``தெருளாதான் மெய்ப்பொருள் கண்டற்றால்``9 என்றார். பின்னர் நிற்கும் நிலை, கழைக் கூத்தர் கரணம் இடுதலும் கயிற்றின்மேல் நடத்தலும், குடநீரைத் தலையிற்கொண்டவன் கையிரண்டையும் வீசி நடத்தலும் போலும் அருஞ்செயலாதல் பற்றி முதற்கண், ``தலைப்படலாம் எங்கள் தத்துவன்றன்னை`` என எளிது போலக் கூறினாராயினும் அதுவும் எளி தன்று என்பது வெளிப்படை. தருமம் கடமை. ``அவர்க்குத் தருமமும் ஆகும்` என ஒரு சொல் வருவித்து முடிக்க. அது செய்யாவழித் தீங்கு வருதல் பற்றி, ``தருமம்`` என்றார். உம்மை, இறந்தது தழுவிய எச்சம்.
இதனால், ஞானத்தைப் பெற்றுவிட்டவர்க்கும் ஞானகுரு தரிசனம் இன்றியமையாததால் கூறப்பட்டது.