ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

மனம்புகு தான்உல கேழும் மகிழ
நிலம்புகுந் தான்நெடு வான்நிலம் தாங்க
சினம்புகுந் தான்திசை எட்டும் நடுங்க
வனம்புகுந் தான்ஊர் வடக்கென்ப தாமே

English Meaning:
Siva is in Sahasrathala (North)

Into heart He entered,
For the seven Worlds to rejoice;
Into earth He entered
For the heavens to support;
Into rage He entered
For the eight directions to tremble;
Into wilderness He entered
His abode in North Mountain to be.
Tamil Meaning:
`ஏழுலகங்களிலும் உள்ள உயிர்கள் மகிழும்படி அவைகளின் மனத்தினுள் இருப்பவனும், நீண்ட வானுலகத் தேவரையும், மண்ணுலக மக்களையும் அருள்புரிந்து காக்க வேண்டிப் பல தலங்களில் எழுந்தருளியிருப்பவனும். பாவத்திற்கு அஞ்சாது உலகிற்குக் கொடுமையை விளைப்பவர் யாராயினும் அவர்கள் அஞ்சி நடுங்கும்படி சினம் கொள்கின்றவனும், காட்டை இடமாகக் கொண்டு ஆடல் புரிகின்றவனும் ஆகிய ஒருவனது இருப்பிடம் இப்பெரு நிலத்திற்கு வடக்கெல்லையாகிய இடத்தில் உள்ளது` என்று அறிந்தோர் சொல்லுவர்.
Special Remark:
கயிலை மலையை இவ்வாறு குறிப்பாற் சுட்டினார் `நகர்` என்பது இறைவன் இடத்தைக் குறிப்பதுபோலவே, `ஊர்` என்பதும் அவனது இடத்தைக் குறிக்கும்.
``பணியியர் அத்தைநின் குடையே, முனிவர்
முக்கட் செல்வர் நகர்வலம் செயற்கே``
என்னும் புறப்பாட்டில், இறைவனது இடம் `நகர்` எனச் சொல்லப் பட்டது. `இறைவனாவான் சிவன் ஆதலின், `ஊர்` என்பது அவன் இயல்பாக இருக்கும் இடமாகிய கயிலாய மலையைக் குறிக்கும்` என்னும் கருத்தினால், ``ஊர்க் கோட்டம்``9 எனச் சிலப்பதிகாரம் கூறியதற்கு அரும்பத உரையாசிரியர், `ஷ்ரீ கைலாயம் நிற்கும் கோயில்` என்றும், பொருள் உரைத்தமை இங்கு அறியற்பாலது. ஞான குரு தரிசனத்தில் இதனைக் கூறியது `கயிலை மலையில் தென்முகக் கடவுளாய் இருந்து நால்வர் முனிவர்க்கு ஞானத்தை நால்வர் முனிவர்க்கு ஞானத்தை அளித்த முதலாசிரியன் சிவனே` எனவும், `ஆகவே, உலகில் ஞானத்தை அருளும் ஞானாசிரியர் யாவரும் அவனாகவே கொள்ளற்பாலர்` எனவும் உணர்த்தற் பொருட்டாம்.
``யோகியார் யோக முத்தி உதவுத லதுவும் ஓரார்``l என்னும் சிவஞான சித்தியும் தென்முகக் கடவுள் வடிவத்தையேயாதல் அறிக. இரண்டு மூன்றாம் அடிகளில் அநுக்கிரக நிக்கிரகங்களைச் செய்வோன் ஆதலையும், முதலடியில் அவற்றை அவன் உயிர்களோடு அத்துவிதமாய் நின்று செய்தலையும் குறித்தார். ``உலகு`` என்றது உயிர்களை மகிழ்தற்குரியன அவையேயாகலின்,
``வானிடத் தவரும் மண்மேல் வந்து
அரன்றனை அற்சிப்பர்``8
ஆகலின் நிலவுலகத் தலங்கள் அவர்களது நன்மைக்காகவும் இருத்தலையறிக. இரண்டாம் அடி மூன்றாம் எழுத்தெதுகை பெற்றது. உயிரெதுகை பெற்றதுமாம்.
இதனால், இவ்வுலகத்து ஞான குரவரெல்லாம் தென்முகக் கடவுளாதலைக் கூறுமாற்றான், அவரது தரிசனத்தின் சிறப்புக் கூறப்பட்டது.