ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளைமலர்ச் சோதியி னானைத்
தினைப்பிளந் தன்ன சிறுமைய ரேனும்
கனத்த மனத்தடைந் தார்உயர்ந் தாரே.

English Meaning:
Think of Him and He Thinks of You

Think of Him,
And He thinks of those who think of Him;
Think of Him, the radiance that is,
Of the Flower that blooms in the Divine Fount within;
Smaller than the split grain may they be,
But if firm they hold Him,
Great they shall sure be.
Tamil Meaning:
சிவபெருமான், தன்னை நினைத்தால், நினைப்பவரைத் தானும் நினைப்பான். (நினைத்து, அவரை மேன்மேல் உயரச் செய்வான்) அதனால், சுனைக்குள்ளே மலர்ந்த ஒரு தாமரை மலரின்மேல் எழுகின்ற சோதிபோல இருதய கமலத்திலே ஒளிவடிவாய் விளங்கும் அப்பெருமானை `அடைதல்` என்பது மனத்தால் அடைதலேயாதலின் அவ்வாறு அவனை முதிர்ந்த அன்பால் அடைந்தவர், உலகியலில் எத்துணைச் சிறுமையராய் இருப்பினும், உயர்ந்தோரினும் உயர்ந்தோரேயாவர்.
Special Remark:
`அஃதறிந்து அவரை அடைந்தோரும் உயர்ந்தவரே` அவரை அடைந்து பயன் பெறுதலே அறிவுடைமையும், அங்ஙனம் செய்யாது, உலகியல் பற்றி அவரைப் புறக்கணித்தல் அறியாமையும் ஆம்` என்பது கருத்து. `கொப்பூழ் அடியாகத் தோன்றிட தண்டின்மேல் மலரும் மலர் இருதயம்` எனச் சொல்லப்படுவதால், அதனை, `சுனையின் விளைந்த மலர்`` என்றார். அச்சோதியினை` எனச் சுட்டு வருவித்துக்கொள்க. `தினை, பனை என்பன சிறுமை பெருமைகட்குக் காட்டப்படும் சில அளவைகள்9 பரிமேலழகர் உரை. ஆதலின், சிறுமையை, ``தினைப்பிளந்தன்ன சிறுமையர்`` எனக் குறித்தார். பகர ஒற்று எதுகை நோக்கி விரிக்கப்பட்டது களத்தல் முதிர்தல். அஃது இங்கு அன்பு முதிர்தலைக் குறித்தது.
இதனால், `உயர்ந்தோரினும் உயர்ந்தோராவர் ஞான குரவரே` என்பது கூறும் முகத்தால், அவரது தரிசனத்தின் உயர்வு கூறப்பட்டது.