ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

உண்ணும் வாயும் உடலும் உயிருமாய்க்
கண்ணும்மா யோகக் கடவுள் இருப்பது
மண்ணும் நீர் அனல் காலொடு வானும் மாய்
விண்ணும்பின் னின்றி வெளியானோர் மேனியே.

English Meaning:
Holy Guru Shows the Light in Eye-Brow Centre

Like a lustrous ray of red gem
On to a green stone set
Is the Holy Guru`s Jnana precept;
That ray in the eye-brow Centre is;
It is the Light within the Light Resplendent.
Tamil Meaning:
நிலம் முதலிய பூதங்கள் ஐந்தையுமேயன்றி, அவை தோன்றியொடுங்கும் இடமாகிய மூலப் பகுதியையும் கடந்து அறிவேயான ஞானியரது உடம்பில், யோகத்தால் கருதியுணரப் படுகின்ற கடவுள் இருப்பது, உணவை உண்கின்ற வாய் முதலிய உறுப்புக்கள் அவற்றையுடைய, உடம்பு அதனுள்ளிருக்கும் உயிர் ஆகிய அனைத்திலும் ஒன்றாய்க் கலந்தேயாம்.
Special Remark:
மூன்றாம் அடி முதலாகத் தொடங்கி, முதல் அடியை ஈற்றில் வைத்து உரைக்க. அருவமாதல் பற்றி மூலப் பகுதியை ``விண்`` என்றார். இங்குக் குறிப்பது சகலரையேயாதலின் அவருக்குரிய மூலப் பகுதியை மட்டுமே கூறினார். எனினும், உபலக்கணத்தால் அசுத்த மாயையும் கொள்ளப்படும். வெளியாதல் - விடுபடுதல். மாயையினின்றும் விடுபடுதலாவது, அவற்றின் காரியங்களைத் தாமாக மயங்காது, தம்மை அவற்றின் வேறாக உணர்வில் நிலைபெற்றிருத்தல் அத்தகையோர் மாசுடையாராகாது தூயராகலின், அவரது உடம்பும் தூயதாக, அதன் கண்ணும் சிவன் விளங்குவான்` என்க. இது பற்றியே,
``... ... நிலாவாத புலால் உடம்பே புகுந்துநின்ற
கற்பகமே``3
எனவும்,
``எந்தையே! ஈசா! உடல்இடம் கொண்டாய்;
யான் இதற் கிலன்ஓர்கைம் மாறே``l
எனவும் திருமொழிகள் எழுந்தன என்க. `மேனியில்` என ஏழாவது விரிக்க. உடம்பு நிலைபெறுதற்கு உணவு இன்றியமையாதாதல் பற்றி அதனை உண்ணும் உறுப்புச் சிறந்தெடுத்துக் கூறப்பட்டது. கண்ணல் - கருதல்.
``இருப்பது`` என்ற வினைப்பெயர் அத்தொழில் மேல் நின்றது ஆதலின், அவ்வெழுவாய்க்கு, ``ஆய்`` என்ற வினையெச்சம் பயனிலையாயிற்று. `ஒருவன் உயர்வது உழைத்து` என்பதிற்போல.
``மாயோகக் கடவுள்`` என்றது, தென்முகக் கடவுளையே என்பர்.
இதனால், ஞானிகளது திருமேனியைச் சிவன் தனதாகக் கொள்ளுதல் கூறும் முகத்தால், குரு தரிசனம் சிவ தரிசனமேயாதல் கூறப்பட்டது.