ஓம் நமசிவாய

ஒன்பதாம் தந்திரம் - 2. ஞானகுரு தரிசனம்

பதிகங்கள்

Photo

தான்ஆன வண்ணம்ஐங் கோசமும் சார்தரும்
தான்ஆம் பறவை வனம்எனத் தக்கன
தான்ஆன சோடச மார்க்கம்தான் நின்றிடில்
தான்ஆம் தசாங்கமும் வேறுள்ள தாமே.

English Meaning:
Way of Seeking Within Leads to Supreme Attainment

Of five sheaths1 is the Jiva`s body;
Like a forest is that body
Where the Jiva-bird its abode has;
If the Jiva seeks the Way of Sixteen2 worships
Then is Jiva`s Ten attainments3 are.
Tamil Meaning:
சார்ந்ததன் வண்ணமாம் தனது இயல்பினால் ஐந்து உடம்புகளைச் சார்ந்து அவையேதானாய் நிற்கின்ற பறவையாகிய உயிர் அது சென்ற திரியும் காடாகிய சொல்லுலகத்தில் `பதினாறு பாகளை உடைய ஒரு நல்ல வழியைக் கண்டு நடக்குமாயின், அது சிவமாம் தன்மையை அடையும், இனி, அஃதேயன்றி, அப்பறவை சிவமாதற்குப் பத்து படிகளையுடைய வேறொரு வழியும் உண்டு.
Special Remark:
ஐந்து உடம்புகள் எட்டாம் தந்திரத் தொடக்கத்தே காட்டப் பட்டன. அவை பறவைகளின் உடம்பாகவும், அவற்றில் உள்ள உயிர் பறவையாகவும் உபநிடதங்களில் உருவகிக்கப் படுதலும் மேலே கூறப் பட்டன* சொல்லுலகமாவது மொழி மொழி வாயிலாகவே உயிர் உலகத்துப் பொருள்கள் பலவற்றையும் மிக விரைவாக, மாறி மாறி உணர் கின்றது. அதனால், மொழியை உயிராகிய பறவை பறந்து திரியும் காடாக உருவகித்தார். ஆயினும் உயிருக்கு உறுதி பயக்கின்ற மந்திரங்களும் அந்தச் சொல்லுல கிலேதான் உள்ளது. ஆதலின் அவற்றை அந்தக் காட்டில் கிடைக்கும் வழியாக வைத்து, அவற்றுட் சிறந்த சோடச கலாப் பிராசாத மந்திரத்தைப் பதினாறு படிகளையுடைய நல்ல வழியாகக் கூறினார். `தசாங்கம்` என்றது தச காரியத்தை. பிராசாத யோகம் யோகமாய் நிற்க, தச காரியம் ஞானம் ஆதல் பற்றி அவற்றின் வரிசையை ``வேறுள்ளது`` என்றார். இனி, ``சோடச மார்க்கம்`` என்பதை, `சரியை -யிற் சரியை, சரியையிற் கிரியை முதலிய பதினாறு` என்பாரும் உளர். இங்கு விளக்கப்படுவது ஞானம் ஒன்றேயாகையாலும், பிரிசாத யோகம் ஞானயோகமே ஆதலாலும் அவர் கூறும் பொருள் சிறவாமை அறிக.
பிராசாதயோகம், தச காரியம் - இவற்றை அவ்வந் நூல்களிற் காண்க.
``தான்`` நான்கில் முன்னிரண்டும்` ஆன்மாவால் சாரப்படும் பொருள். பின்னிரண்டும் சிவம். `வண்ணத்தோடும்` என உருபு விரிக்க. ``சார்தரும்`` என்பது, `சார்தந்து` என வினையெச்சப் பொருள் தந்தது. `வனம் எனத் தக்கனவற்றில்` என ஏழாவது விரிக்க. `சோடசத்தையுடைய மார்க்கம்` என்க. மூன்றாம் அடியில் உள்ள ``ஆன`` என்னும் பெயரெச்சம், ``மார்க்கம்`` என்னும் ஏதுப் பெயர் கொண்டது. ``ஆன்`` என்னும் இரண்டு இறந்த காலங்களும் முன்னை நிகழ்ச்சி வாயிலாக முக்கால நிகழ்ச்சியையும் குறித்தவாறு.
இதனால், `ஞான குரு தரிசனத்தால் உயிர் உய்யும் வழியை உணரும்` என்பது குறிப்பால் உணர்த்தப்பட்டது.