ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்

பதிகங்கள்

Photo

வரவறி வானை மயங்கிருள் ஞாலத்
திரவறி வானை எழுஞ்சுடர்ச் சோதியை
அரவறி வார்முன் ஒருதெய்வம் என்று
விரவறி யாமலே மேல்வைத்த வாறே.வரவறி

English Meaning:
Their Thoughts Do Not Reach to the Lord

He who knows the Origin of all,
He who knows the Night (end)
That envelops worlds all,
The Self Luminous Light
He whom the Enlightened held aloft
As the One God Supreme,
Him they know not;
And thus on this world their thoughts still stand.
Tamil Meaning:
பகலும், இரவும்கலந்து நிற்கின்ற உலகத்தில் உயிர்கள் தோன்றுதல், மறைதல் ஆகியவற்றின் வழிமுறைகள் முழுவதையும் நன்குணர்ந்து அவைகளை ஏற்றபெற்றியால் செய்விக் கின்றவனும், முடிவில் அவ்வுயிர்கள் இராப்பகல் அற்ற இடத்தில் இருக்கும்படி வைத்து அவைகட்கு என்றும் விளக்கத்தைத் தந்தும் விளங்கியும் நிற்கின்ற, சுடர்விடுகின்ற பெருவிளக்காய் உள்ளவனும் ஆகிய சிவபெருமானை, `நுண்ணறிவாளர் திரிபின்றி உணர்கின்ற ஒப்பற்ற முழுமுதற் கடவுள்` என்று உணர்ந்து அவனை அடைந்து உய்ய அறியாமையால் பலர்வேறு வேறு தெய்வங்களை முதற் கடவுளாகக் கருதி இடருள் அழுந்துதல் இரங்கத்தக்கது.
Special Remark:
``மயங்கிருள் ஞாலத்து`` என்பது தாப்பிசையாய் முன்னும், பின்னும் சென்றியைந்தது. மயங்குதல் - கலத்தல். ``இருள்`` என்றதனால் `ஒளி` என்பது போந்தது. மேல் உலகம் ஒளியுலகமும், கீழ் உலகம் இருள் உலகமும், இடையுலகமும் இரண்டையும் உடைய உலகமும் ஆதலின் ``மயங்கிருள் ஞாலம்`` என்றது இடையுலகத்தை யாயிற்று ஏனை இரண்டும் போக பூமியும், இதுவே கரும பூமியும் ஆதலின் உயிர்கள் இவ்வுலகத்துத் தோன்றுதல் மறைதல்களையே குறித்தார். வரவு தோற்றமாதல் வெளிப்படை. இரவு, இருள் ஆதலின் அஃது அறிவைத் தரும் தேகத்தை விட்டு அறியாமையிற் செல்வதாகிய இறப்பைக் குறித்தது. ``எழும்`` என்ற விதப்பு, எஞ்ஞான்றும் மறைதல் இன்றி விளங்கியே நிற்றலைக் குறித்தது. அதுவே அருள்வெளி என்க. அர அறிவு - அரம் போலும் கூரிய அறிவு. ``அரம் போலும் கூர்மைய ரேனும்`` (திருக்குறள், 997) என்றதும் காண்க. முன் தெய்வம் - நினைக்கின்ற கடவுள்; வினைத்தொகை. ஒரு தெய்வம் - ஒப்பற்ற தெய்வம். ``மேல்`` என்றது `வேறு` என்னும் பொருட்டு ஆக்கம் வருவிக்கப்படும். ``வைத்து`` என்றது, அதனால் இடர்ப்படுதலாகிய தன் காரியம் தோற்றி நின்றது. `இரங்கத்தக்கது` என்பது சொல்லெச்சம்.
இதனால், இன்றியமையாது அறியற்பாலதனை அறிந்து பயன்பெறாது மயங்கி இடர்ப்படுவாரது மயக்கம் நோக்கி இரங்குதலைச் செய்து, வருகின்ற அதிகாரத்திற்குத் தோற்றுவாயும் செய்யப்பட்டது.