ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்

பதிகங்கள்

Photo

வித்துப் பொதிவார் விதைவிட்டு நாற்றுவார்
அற்றதம் வாழ்நாள் அறிகிலாப் பாவிகள்
உற்ற வினைத்துயர் ஒன்றும் அறிகிலார்
முற்றொளி ஈயல் முளிகின்ற வாறே.

English Meaning:
Ungodly Ones do not Think of Soul`s Liberation

They germinate the seed;
They plant the seedlings;
They think not of their own fleeting life;
Poor are they in spirit;
They know nothing of Karmic sorrows;
They perish in the blazing fire,
Verily are they such.
Tamil Meaning:
மக்கள் தமக்கு வரையறுக்கப்பட்டு அமைந்த வாழ் நாள் இத்துணையது என்று அறியமாட்டாதவராய் அன்றாடம் உண்டு வாழ்வதேயன்றி, அடுத்துவரும் ஆண்டிற்கும் உணவின் பொருட்டான முயற்சிகளை ஓயாமற் செய்வதிலேயே மனம் அமைதியுற்று விடுகின்றனர். இஃது அவர் பிரார்த்த வினைவிளைவாகிய துன்ப நிலையே என்பதையும் அவர் சிறிதும் அறிவதில்லை. இந்தப் பொய்யான இன்பத்திலே அவர் வீழ்ந்து கெடுதல் ஓங்கி எரியும் விளக்கை இனிய உணவென்று கருதிச்சென்று அதில் வீழ்ந்து மடிகின்ற விட்டிற் பூச்சியின் செயலோடு ஒப்பதாகும். அந்தோ? இஃது அவர் ஓர் அறியாமை இருந்தவாறு!.
Special Remark:
ஈற்றில் வருவித்துரைத்தது குறிப்பெச்சம். நாற்றுதல் - நாற்றங்காலில் நாற்றுவிடுதல். ஒளி, ஆகுபெயர். விட்டிலை ஒப்புமைபற்றி, `ஈயல்` என்றார். இதன் ஈற்றடியில் காணப்படும் பாட வேறுபாடுகள் சில.
இஃது யாக்கை நிலையாமையை அறியாது உழலுதல் நோக்கி இரங்கியவாறு.