ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்

பதிகங்கள்

Photo

நெஞ்சு நிறைந்தங் கிருந்த நெடுஞ்சுடர்
நஞ்செம் பிரான்என்று நாதனை நாடொறும்
துஞ்சு மளவும் தொழுமின் தொழாவிடில்
அஞ்சற்று விட்டதோர் ஆனையும் ஆமே.

English Meaning:
They Fall a Prey to Senses

He is the Great Light
That fills my heart;
Melting in love
Daily adore Him,
Like the end of your days;
If you adore not,
The Five senses havoc cause
Like the elephants that roam loose.
Tamil Meaning:
சிவபெருமானை, `ஒவ்வொருவர் உள்ளத்திலும் நிறைந்து அங்கு ஒளிவிட்டும் விளங்குகின்ற அணையா விளக்கு` என்றும், `உயிர்கட்கெல்லாம் உண்மையான முதற் கடவுள்` என்றும் உணர்ந்து நாள்தோறும் வழிபடுங்கள். இறக்குமளவும் வழிபடுங்கள். அவனை அவ்வாறு வழிபடாது புறக்கணித் திருப்பின் உங்களுடைய ஐம்பொறிகளும் கட்டிய சங்கிலி அறுபட்டொழிந்த அத்தன்மையை உடைய யானைகளாய் விடும்.
Special Remark:
அஃதாவது, `அவை நும்வழிப்படாது தம் வழியிலே உங்களைக் கொண்டு சென்று அலைக்கழிக்கும்` என்பதாம். நெடுமை, காலம் பற்றி வந்தது. ``நாதனை`` என்பதை முதலில் கூட்டியுரைக்க. ``நம்`` என்றது உயிர்கள் அனைத்தையும் ஒரு பெற்றியவாகத் தம்மோடு உளப்படுத்தி எண்ணுதலை. ``நாதன்`` என்றது சொல்லு வாரது குறிப்பால் சிவனை உணர்த்திற்று. செம்பிரான் நேர்க்கடவுள்; உண்மைக் கடவுள். ``தொழுமின்`` என்பதை ``நாடொறும்`` என்பத னோடும் கூட்டுக. `அஞ்சும்` என்னும் முற்றும்மை தொகுத்தலாயிற்று. `அஞ்சும்ஆம்` என இயையும். ஆக்கம் உவமை குறித்து நின்றது. ``ஓர்`` என்றது தன்மையைக் குறித்தது.
இதனால், ஐம்பொறியால் ஆட்டுண்டலின் நின்று நீங்கும் வழியறியாது அல்லலுறுவாரை நோக்கிஅவர் மேல் எழுந்த இரக்கத்தால் அவர்க்கு அவ்வல்லலின் நின்று நீங்கும் வழி கூறியவாறு.