ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்

பதிகங்கள்

Photo

கரையரு காறாக் கழனி விளைந்தது
திரையரு காமுன்னம் சேர்ந்தின்பம் எய்தும்
வரையரு கூறிய மாதவம் நோக்கின்
நரையுரு வாச்செல்லும் நாள்இல வாமே.

English Meaning:
Seek Lord Before Floods of Age Swell

Along the banks of the river (of Life)
The field ripened;
Before the floods (of age) swell,
Seek the Bliss Divine;
Practise Yoga
That takes you to the Mountain top
Where the ambrosial waters flow;
Then no more does greying age seize you.
Tamil Meaning:
ஆற்றங் கரையை அடுத்து ஒரு கழனி உண்டு. அதில் உண்டாகின்ற விளைவை உடையவன் பெறுதல் அரிது ஏனெனில், ஆற்றில் எப்பொழுது வேண்டுமானாலும் வெள்ளம் பெருகி வந்து விளைவை அழித்துவிடும். அதனை உணர்ந்து நீவிர் விழிப்பாய் இருந்து வெள்ளம் பெருகி வருவதற்கு முன்னே விளைவிற்குப் பாதுகாப்புச் செய்து விளைவின் பயனை எய்துங்கள். [இஃது ஒட்டணி. ஆறு - வினைவிளைவின் தொடர்ச்சி. ஆற்றங்கரை - அத்தொடர்ச்சியைச் சார்ந்திருக்கின்ற உடம்பு. கழனி - உடம்பில் உள்ள உயிர்; என்றது அதன் உணர்வை, அதில் விளைவது சிவபுண்ணியத்தின் பயனாக விளங்கிய சிவஞானம், அதனை எப்பொழுதும் வந்து அழிக்க இருப்பது உயிருணர்வை வேறுபடுத்தும் வினைவிளைவு. அருகாமுன்னம் - நெருங்குதற்குமுன்னே, இவற்றை இங்ஙனம் அணிவகையால் உணர்த்திய பின்பு அப்பயனைப் பெறுமாற்றைப் பின்னிரண்டடிகளால் நேராகவே உணர்த்தினார். அஃதாவது] மலைமுழை முதலிய தனியிடங்களில் இருந்து செய்வதனால் வளர்ந்து முதிர்கின்ற தவத்தில் உணர்வு செல்லுமாயின் நரை, திரை, மூப்பு இவற்றோடுகூடி வருகின்ற நாட்கள் உங்கட்கு இல்லையாகும்.
Special Remark:
`ஆகையால் அத்தவத்தில் உணர்வைச் செலுத்தி உணர்வு திரியாது நின்று சிவஞானத்தை முற்றப்பெற்றுப் பயன் அடையுங்கள்` என்பதாம். ``கரையருகு ஆறா`` என்பதனை, `ஆறுகரை அருகா` எனமாற்றி உரைக்க. இங்ஙனம் மாறி நின்றமையால், `ஆறு` என்பது ஒற்று இரட்டுதலும் அம்முப் பெறுதலும் இல்லையாயிற்று. ``தவம்`` என்றதும் சிவபுண்ணியத்தையே யாகலின், அது கேட்டற்குப் பின் விடாது நிகழும் சிந்தித்தல் தெளிதல்களாகிய ஞானத்திற் கிரியை ஞானத்தில் யோகம் இவற்றைக் குறித்து நின்றன. இந்நிலையுடையோர் சிவயோகத்தையும் உடையராவர் ஆதலின் அவர்க்கு நரை திரை மூப்புக்கள் இலவாதல் அறிக.
இதனால், ஞானத்தை எய்தினோரும் பார்க்காமல் அதனை இழத்தலை நோக்கி யிரங்கி அவர் அவ்வாறு அதனை இழவாதிருக்க அறிவுறுத்தியவாறு.