ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்

பதிகங்கள்

Photo

விரைந்தன்று நால்வர்க்கு மெய்ப்பதி சூழ்ந்து
புரந்தகல் லால்நிழற் புண்ணியன் சொன்ன
பரந்தன்னை ஓராப் பழிமொழி யாளர்
உரந்தன்மை யாக ஒருங்கிநின் றார்களே.

English Meaning:
They Stand in Wait for the Burial Heap

In days of yore, the Sages Four
Sought the Holy One in Kailas;
There, under the wind banyan tree
The Supreme One His teachings imparted;
They are of evil speech
Who think not of Him;
Ready to march to the burial heap
They stand in wait.
Tamil Meaning:
தனக்கு உண்மையிடமாகிய திருக்கயிலையின் பாங்கர் நிலவுலகத்து மக்கள் பொருட்டாகத்தான் நிலைநிறுத்திய கல்லால மர நிழலின்கண் இருந்து சிவன் படைப்புக் காலத்திலே முனிவர் நால்வர்க்கு அவர் விரும்பிய உடனே அருளிச் செய்த முதல் மொழிகள் அம்முனிவரிடமிருந்து நல்லோரால் வழிவழியாகப் பெறப் பட்டு உலகில் வழங்கா நிற்கவும் அவற்றைக் கேளாது பழித்து ஒதுக்கத் தக்கனவாகச் சிற்றறிவுடையரால் சொல்லப்பட்டு வழங்கும் மொழிகளைக் கேட்டு நிற்போர் அக்கேள்வியின் பயனாகத் தமது வன்மையையே மெய்ம்மையாகத் துணிந்து இடர்ப்படுகின்றார்களே!. இஃதென்ன அறியாமை!.
Special Remark:
`மறைகள்` எனப்படும் முதல்நூல்கள் நான்கு - என்பதும், அவற்றைப் படைப்புக்காலத்தில் சிவபிரான் கல்லால மர நிழலின்கண் எழுந்தருளியிருந்து முனிவர் நால்வருக்கு அருளிச் செய்தான் - என்பதும், அந்நான்கு மறைகள் அறம், பொருள், இன்பம், வீடு என்னும் உறுதிப் பொருள் நான்கினையும் உணர்த்துவன என்பதும் தேவார திருவாசகங்களாகிய திருமுறைகளில் பல இடங்களில் பரவலாகவே சொல்லப்படுகின்றன. அவற்றுள் சிவன் கல்லால மர நிழலில் எழுந்தருளியிருந்து நால்வர்க்கு முதல் மொழி யாகச் சிலவற்றை மொழிந்தது ஒன்று மட்டும் இம்மந்திரத்தில் சொல்லப் பட்டது. மேற் கூறிய மறைகள் பற்றிய செய்திகளுள் ஒன்றேனும் இன்று வழங்கும் இருக்கு முதலிய ஆரிய நால் வேதங்களுக்கு ஆரியத்துள் ஓரிடத்தும் சொல்லப் படாமையாலும் இவ்வேதங்கள் நான்கும் அறம் முதலிய நாற்பொருள் பற்றிக் கூறாமையாலும் திருமுறைகளில் சொல்லப்பட்ட அம்மறைகள் இருக்கு முதலிய ஆரிய வேதங்கள் அல்ல என்பது தெளிவாதலால் அம்மறைகள் தமிழால் ஆயவையாய், விளங்கியிருந்து பின்னர் மறைந்தனவாகும் என்பர் ஆராய்ச்சியாளர். நீதிநூல் செய்த, ஔவையார் ``தேவர்குறளும்`` (நல்வழி) எனத் தொடங்கும் வெண் பாவில், ``திருநான்மறை`` என்றது திருமுறை களில் மேற்காட்டிய வாறாகச் சொல்லப்படும் தமிழ் மறைகளையே - எனவும், அஃது அவ்வெண்பாவில் குறிப்பிடப்பட்ட நூல்கள் யாவும் தமிழ் நூலாகவே இருத்தல் பற்றியும் அறியப்படும் - எனவும் நிலை நாட்டியவரும் உண்டு. (திரு. கா. சுப்பிரமணியபிள்ளை, எம். ஏ., எம். எம். எல்., திருநான்மறை விளக்கம்).
பரம் - மேன்மை. அது காலத்தால் அனைத்திற்கும் முன்னாக வெளிப்பட்ட மொழிகளைக் குறித்தது. பிறமொழிகளை, ``பழி மொழி`` என்றதனால், `இம்முன் மொழிகள் புகழ்மொழி` என்பது, பெறப்பட்டது. இருக்கு முதலியஆரிய நால்வேதங்களை ஆன்றோர் முன்மொழிகளாகத் தழுவிக் கொண்டமையால், ``பழிமொழி`` என்றது அவற்றிற்கு மாறாக எழுந்த நூல்களையேயாம். அவை உலகாயத சமண பௌத்த சமய நூல்களாம். அவை முற்றிலும் வேதத்திற்கு மாறாவன. வாமம், பாசுபதம், காளாமுகம் முதலிய சமயங்களின் நூல்கள் வேதத்திற்கு ஒருபுடை மாறா வனவாம். உண்மை நூல்கள், `சிவனது ஆற்றலே மெய்ம்மை` எனக்கூற, ஏனைய நூல்கள் அவ்வாறு கூறாமையால், அவற்றின்வழி நிற்போர் உயிர்களாகிய தமது ஆற்றலையே மெய்ம்மையாகக் கருதுதல் பற்றி, ``உரம் தன்மையாக ஒருங்கிநின்றார்களே`` என்றார். உயிர்களின் ஆற்றல் உலகியலிற்றானே சிலவற்றிற் செல்லமாட்டாமை கண் கூடாகவும் அவ் வாற்றலையே மெய்ம்மையாகக் கருதுதல் அறியாமை என்பது கருத்து. `ஏனைய எவ்வாறாயினும், இத்தன்மையோர் பிறவித் துன்பத்தினின்றும் நீங்கார்` என்பதே இங்குக் கருதப்பட்டது.
இது, ``நெறியல்லா நெறிதன்னை நெறியாக``க் (தி.8 அச்சோப்பதிகம்) கொள்வாரை நோக்கி இரங்கியவாறு. இவர்
``முன்னெறியாகிய முதல்வன் முக்கணன்
தன்னெறிய சரண் ஆதல் திண்ணம்`` -தி.4 ப.11 பா.9
என்பதை அறியார்.