ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்

பதிகங்கள்

Photo

கருத்தறி யாது கழிந்தன காலம்
அருத்தியுள் ளான்அம ராபதி நாதன்
ஒருத்தனுள் ளான்உல கத்துயிர்க் கெல்லாம்
வருத்திநில் லாது வழுக்குகின் றாரே.

English Meaning:
They Slip Low Down

Seeking Him not,
I wasted my life away;
In my love
Is the Lord of Celestial Beings;
He is the One Being,
For the worlds all;
Yet in their thoughts
They praise Him not,
Low down they slip.
Tamil Meaning:
தன்னிடத்துச் செலுத்துகின்ற அன்பு உடையாரது அன்பிலே விளங்கி நிற்பவனும், தேவர்கட்கும் தேவனுமாய் உள்ள ஒருவனே அனைத்துயிர்கட்கும் ஒப்பற்ற தலைவன். அடங்காது ஓடுகின்ற மனத்தை வருத்தியாயினும் அடக்கி அவனை நினைந்து நில்லாமையால் பலர் அவனைப் பெறத் தவறுகின்றார்கள். அதனால் அவர்களது காலங்கள் உண்மையை உணராமலே கழிந்தொழியும்.
Special Remark:
`இஃது இரங்கத்தக்கது` என்பது குறிப்பெச்சம். முதலடியை ஈற்றில் வைத்துரைக்க. துணிவு பற்றி எதிர்காலம் ``கழிந்தன`` என இறந்த காலமாகச் சொல்லப்பட்டது. அருத்தி - அன்பு. அமராபதி - தேவர் உலகம். அஃது ஆகுபெயராய்த் தேவரை உணர்த்தி நின்றது. ``உள்ளான்`` என்னும் குறிப்பு வினைப்பெயர் எழுவாயாய் நின்றது. ``உயிர்க்கெல்லாம்`` என்பதன் பின்னும் ``ஒருத்தன்`` என்பதைக் கூட்டி மேற்குறித்த எழுவாய்க்குப் பயனிலையாக்கி முடிக்க.
இதனால், மனத்தால் அன்புசெயற்பால பொருளில் அன்பைச் செலுத்தாது, பிறபொருளில் அன்பு செலுத்தி நிற்கும் அறியாமை நோக்கி இரங்கியவாறு.