ஓம் நமசிவாய

ஏழாம் தந்திரம் - 37. கேடுகண்டிரங்கல்

பதிகங்கள்

Photo

இப்பரி சேஇள ஞாயிறு போல் உரு
அப்பரி சங்கியின் உள்ளுறை அம்மானை
இப்பரி சேகம லத்துறை ஈசனை
மெய்ப்பரி சேவின வாதிருந் தோமே.

English Meaning:
They Sought Not Lord

Thus He is,
Like the rising sun, His Form;
That He is,
Within the Fire Kundalini resides;
There He is,
In the Lotus of Heart seated;
The True He is,
The Lord, we sought not.
Tamil Meaning:
முன் மந்திரத்தில் கூறிய உமாதவனாகிய சிவன் தன் அடியவர் முன் புறத்தே தோன்றிக் காட்சி வழங்குமிடத்துக் காலையில் தோன்றுகின்ற இளஞாயிற்றைப் போலும் உருவுடையனாய் விளங்குவான். [அது ``காலையே போன்றிலங்கும் மேனி`` (தி.11) என்பது முதலிய திருமொழிகளான் உணரப்படும்] இனி அவர்க்கு இவ்வாறு புறத்துத் தோன்றுதல் போலவே அகத்துத் தோன்றுங்கால் உள்ளக் கமலத்தை இடமாகக்கொண்டு என்றும் இருப்பவனாய் விளங்குவான். இவ்விரண்டும் இன்றிக் கரந்து நின்று அருள்புரியுமிடத்துச் சிறிதும், பெரிதுமாய தீப்பிழம்புகளின் உள்ளிருந்து அருள்புரிவான். [இவ் வுண்மைகள் எல்லாம் அவனை அறிந்து இன்புறும் பெரியோரை அடுத்துக் கேட்பின் விளங்கும்]. அவ்வாறு கேட்டுணராது நாளை வீணாகக் கழிக்கின்றோமே; இஃது அறியாமையன்றோ!
Special Remark:
பரிசு - தன்மை. அண்மையிடத்தனாய் வெளிப்படும் நிலைகளை ``இப்பரிசு`` எனவும், வெளிப்படாது சேயனாய் நிற்கும் நிலையை ``அப்பரிசு`` எனவும் கூறினார். இவ்விடங்களில் `பரிசின் கண்` என ஏழாவதும், ``மெய்ப்பரிசு`` என்பதில் இரண்டாவதும் விரிக்க, பிறரது அறியாமையைப் புலப்படுத்தக் கருதினவன் அவர் உடன்படுமாற்றால் தம்மையும் அவரோடு உளப்படுத்திக் கூறினார்.
செய்தற் கரிய செயல்பலவும் செய்துசிலர்
எய்தற் கரியதனை எய்தினர்கள் - ஐயோநாம்
செய்யாமை செய்து செயலறுக்க லாயிருக்கச்
செய்யாமை செய்யாத வாறு. -திருக்களிற்றுப் படியார், 61
எனப் பிறரிடத்தும் இவ்வாறு வருதல் காண்க. ``அம்மானை ஈசனை`` என்பவற்றோடு இயைய, ``உரு`` என்பதைனயும், `உருவனை` என்க.
இதனால், ஞானம் இல்லாதார் அஃது உடையாரை அடைந்து அதனைப் பெற வாய்ப்பு உள்ளதாகவும் அவ்வாறு பெறாதிருக்கும் புறக்கணிப்பு நோக்கி இரங்கியவாறு.